Home Featured தொழில் நுட்பம் தலைமை ஏற்பதற்காகவே சுந்தர் பிச்சை உருவாக்கப்பட்டார் – முன்னாள் கூகுள் அதிகாரி பெருமிதம்! 

தலைமை ஏற்பதற்காகவே சுந்தர் பிச்சை உருவாக்கப்பட்டார் – முன்னாள் கூகுள் அதிகாரி பெருமிதம்! 

491
0
SHARE
Ad

Android-Sundar-Pichaiசான்பிரான்சிஸ்கோ, ஆகஸ்ட் 13 – சுந்தர் பிச்சை, சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அறிவிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பினை கூகுளின் நிறுவனர் லாரி பேஜ் வெளியிட்டதும், உலக அளவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும், செய்தி நிறுவனங்களும் பெரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தின. ஆனால், முன்னாள் கூகுள் அதிகாரி ஒருவர், இந்த அறிவிப்பில் தனக்கு எந்தவொரு ஆச்சரியமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த தமிழரான சுந்தர் பிச்சை பற்றி நாள்தோறும் பல்வேறு செய்திகள் வெளியாகத் தொடங்கி விட்டன. சென்னை வாசிகள் பலர், அவர் சென்னையில் வாழ்ந்த காலம் பற்றி பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், சுந்தர் பிச்சை கூகுளின் தலைமை ஏற்பதற்காகவே உருவாக்கப்பட்டவர். அவர் மீது கூகுள் வைத்திருக்கும் நம்பிக்கை அளப்பரியது என்று சுந்தர் பிச்சையுடன் பணியாற்றிய முன்னாள் கூகுள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் பல வருடங்களாக பணியாற்றிய அவர் சமீபத்தில் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். சுந்தர் பிச்சை பற்றி அவர் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“சுந்தர் பிச்சை, கூகுள் குரோமின் குழுவில் இணைந்தது. அதன் பின்னர் அவர் அண்டிரொய்டு மற்றும் குரோம் பிரிவுகளுக்கு தலைமை ஏற்றது போன்றவற்றை கூர்ந்து கவனித்து இருந்தால், தற்போதய அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்காது. சுந்தர் தலைமை ஏற்பதற்கான தகுதி நிறைந்த ஒருவர். அவர் அதற்காகவே உருவாக்கப்பட்டார். லாரி பேஜ், சுந்தரை பெரிதும் மதித்தார். சுந்தர் பிச்சையிடம் ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது. அவருடன் பணியாற்ற அனைவரும் விரும்புவர். ஊழியர்கள் மட்டுமல்ல தலைவர்களும் அவரை பெரிதும் மதித்தனர். அவரால், தற்போதய பதவியை மேலும் சிறப்பாக செய்ய முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பில் ஈடுபட்டு இருக்கும் கூகுள் நிறுவனம், அண்டிரொய்டு, குரோம் இயங்குதளம், விளம்பரங்கள், கூகுள் ப்ளே ஸ்டார், மேப், யூ டியூப் ஆகிய பிரிவுகள் அடங்கிய கூகுளுக்கு சுந்தர் பிச்சையை தலைமை ஏற்கச் செய்துள்ளது.

கூகுளின் எதிர்கால ஆராய்ச்சிகள், ஆளில்லா விமானங்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வர்த்தகம், கூகுள் வென்சர்ஸ் போன்ற பிரிவுகள்  ‘ஆல்ஃபபெட்’ (Alphabet) என்ற புதிய நிறுவனத்தின் கீழ் வர இருக்கிறது. இதனை கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜும், செர்ஜி பிரின்னும் கவனிப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.