Home Featured நாடு டாக்டர் ஷாலினியின் செயலுக்கு மலேசிய மருத்துவ சங்கம் பாராட்டு!

டாக்டர் ஷாலினியின் செயலுக்கு மலேசிய மருத்துவ சங்கம் பாராட்டு!

745
0
SHARE
Ad

MMAகோலாலம்பூர் – விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை வார்த்தைகளால் காயப்படுத்தினாலும், தான் ஒரு மருத்துவர் என்பதை உணர்ந்து அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்த மருத்துவர் ஷாலினி பரமேஸ்வரனை மலேசிய மருத்துவ சங்கம் பாராட்டியுள்ளது.

இனவாத முகத்திற்கு முன்னே அவரின் முன்னுதாரணமான நிபுணத்துவத்தையும் மருத்துவ சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர் விரும்பாதத்தை எதுவும் செய்யாமல், அந்தக் கடினமான சூழ்நிலையிலும் தனது பணியை ஷாலினி சிறப்பாக செய்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் சாசாரியா பிலிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“அதேநேரத்தில், அடிபட்டுக் கிடக்கும் அவரை சாலையோரத்தில் தனியாக விட்டுச் செல்லவில்லை அவர். மாறாக இறுதிவரை (மருத்துவ சேவைகள் கிடைக்கும் வரை) இருந்துள்ளார்”

“நான் நினைக்கிறேன் அது தான் நல்லது. அவர்கள் (நோயாளிகள்) தொட வேண்டாம் என்று கூறினால், அவர்களை நீங்கள் தொட வேண்டியதில்லை. அவர்களின் சம்மதம் முதல் தேவை.”

“அதேநேரத்தில், நீங்களும் அவரைப் போன்ற குணத்தை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவரை மேலும் துன்பப்படுத்த வேண்டியதில்லை” என்று நேற்று நடந்த நேர்காணல் ஒன்றில் டாக்டர் அசோக் தெரிவித்துள்ளார்.

மேலும், ஷாலினி அந்த சூழ்நிலையைப் புரிந்து கொண்டு கோபப்படாமல் மிகவும் மனிதத்தன்மையோடு நடந்து கொண்டுள்ளார் என்றும், அது போன்ற விபத்துகளில் சிக்கியவர்கள் அதிர்ச்சியில் அவ்வாறு பேசுவது நடக்கக் கூடிய ஒன்று தான் என்றும் டாக்டர் அசோக் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்டர் ஷாலினி தனது பேஸ்புக்கில் செய்த பதிவு ஒன்றில், விபத்தில் சிக்கிய ஒருவரை தான் காப்பாற்றச் சென்ற போது, அந்நபர் தன்னை ‘கெலிங்’ (மலேசியாவில் இந்தியர்களை குறிப்பிடும் ஒரு அவமானகரமான சொல்) தொட வேண்டாம் என்று சொன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது பதிவு மலேசியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.