Home Featured நாடு “முக்ரிசை கெடா மக்கள் விரும்புகின்றனர் – பதவி விலக வேண்டியது நஜிப்தான்” – அனினா எதிர்த்...

“முக்ரிசை கெடா மக்கள் விரும்புகின்றனர் – பதவி விலக வேண்டியது நஜிப்தான்” – அனினா எதிர்த் தாக்குதல்

530
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் – கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் தலைமைத்துவம் மீது நம்பிக்கையில்லை என அம்மாநில அம்னோ துணைத் தலைவரும் மற்ற தலைவர்களும் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, லங்காவி அம்னோவின் முன்னாள் உறுப்பினரும், நஜிப்பின் எதிர்ப்பாளருமான அனினா சாடுடின், முக்ரிசைத் தற்காத்துப் பேசியுள்ளார்.

Anina Najibகடந்த 13வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியிடமிருந்து கெடா மாநிலத்தை தேசிய முன்னணி மீட்டதில் முக்கியப் பணியாற்றியவர் முக்ரிஸ் என்றும்அனினா தெரிவித்துள்ளார்.

கெடா அம்னோ 12வது பொதுத் தேர்தலில் மாநிலத்தை பக்காத்தான் கூட்டணியிடம் பறிகொடுத்தது என்பதையும், அதன்காரணமாக பாஸ் கட்சி தலைமையிலான ஆட்சி கெடாவில் அமைந்தது என்பதையும் அனினா நினைவு கூர்ந்தார். “முக்ரிஸ் மீண்டும் கெடாவுக்கு வந்த காரணத்தால் அம்னோவும் தேசிய முன்னணியும் 13வது பொதுத் தேர்தலில் கெடா மாநிலத்தைக் கைப்பற்ற முடிந்தது” என ஃபிரி மலேசியா டுடே இணையப் பத்திரிக்கையிடம் தொடர்பு கொண்டு அனினா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“கெடா மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் எந்த அளவுக்கு முக்ரிஸ் மோசமான மந்திரிபெசார் என்பது குறித்து விவாதிக்கவில்லை. மாறாக, நஜிப் எவ்வளவு மோசமான பிரதமர் என்பது குறித்துத்தான் விவாதித்து வருகின்றனர். அனைவரும் மந்திரி பெசார் என்ற முறையில் முக்ரிசின் பணிகளைப் பாராட்டியே வருகின்றனர்” என்றும் அனினா கூறியுள்ளார்.

கெடா அம்னோவினர் நஜிப்பின் பதவி விலகலுக்குத்தான் நெருக்குதல் தர வேண்டும் என்றும் அனினா சாடியுள்ளார்.

நேற்று கெடா அம்னோவினர் முக்ரிசுக்கு எதிரான ஓர் அறிக்கையை விடுத்திருந்தனர்.

அனினா, நஜிப்பின் 2.6 பில்லியன் நன்கொடை தொடர்பில் வழக்கு தொடர்ந்ததன் காரணத்தால் அம்னோவிலிருந்து விலக்கப்பட்டவராவார்.