Home Featured தமிழ் நாடு நீதிபதி குன்ஹா தீர்ப்பு ஊழல் வழக்குகளுக்கு முன்னுதாரணம் – வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து!

நீதிபதி குன்ஹா தீர்ப்பு ஊழல் வழக்குகளுக்கு முன்னுதாரணம் – வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து!

732
0
SHARE
Ad

achபுதுடெல்லி – வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு (நீதிபதி குன்ஹா) ஊழல் வழக்குகளுக்கு ஒரு முன் உதாரணம் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிவி.ஆச்சார்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இம்மனுக்கள் மீது நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய குழு கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறது.

இவ்வழக்கில் கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே முதலில் தமது இறுதிவாதத்தை முன்வைத்தார். பின்னர் கர்நாடகா அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா தமது இறுதிவாதங்களை முன்வைத்து வந்தார்.

#TamilSchoolmychoice

அவர் தமது வாதத்தில், சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்ட பின்னர்தான் ஜெயலலிதா வருமான வரி கணக்கையே தாக்கல் செய்தார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்ஜிஆர் நாளிதழுக்கான சந்தாவும் போலியாக உருவாக்கப்பட்டதுதான் என வாதிட்டார்.

அத்துடன் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் (நீதிபதி குமாரசாமி) தீர்ப்பில் உள்ள கணிதபிழைகளையும் அவர் விவரித்தார். இவ்வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே கர்நாடகா அரசு, அரசு தரப்பாக இணைந்துள்ளது.

ஆகையால் மேல்முறையீட்டு மனுவை கர்நாடகா அரசு தாக்கல் செய்ய முடியாது என்ற தமிழக அரசின் வாதமே அர்த்தமற்றது. வழக்கை இழுத்தடிப்பதற்காக ஜெயலலிதா தரப்பு இத்தகைய மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் யாரும் தலையிடவே முடியாது. அந்த அளவுக்கு அனைத்து ஊழல் வழக்குகளுக்கும் முன்மாதிரியாகப் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அரசு ஊழியரான ஜெயலலிதா தம்முடைய சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிக்க வேண்டியது கடமை. ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்களுடைய சொத்துகளை அரசிடம் தெரிவிக்கும்போது ஜெயலலிதா மட்டும் அப்படி செய்ய தவறியது ஏன்?

ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். ஏனெனில் அந்த தீர்ப்பு புரியாத புதிராக, ஏராளமான கணக்கு பிழைகளுடன் இருக்கிறது என ஆச்சார்யா வாதிட்டார்.