இந்த தகவல்களை ஆதாரத்துடன் ஜெர்மனி நாளிதழ் ஒன்று ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் தகவல்கள் திரட்டப்பட்டு, வெளியிடப்பட்டு இருக்கிறது.
கடந்த 40 ஆண்டுகளில் பனாமா நாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த மெகா பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.
இவர்கள் பனாமாவில் குவித்த சொத்து மற்றும் பணம் பலஆயிரம் கோடி லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் பிரபல நடிகர்-நடிகைகள் உள்பட 500 முக்கிய பிரமுகர்களும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. உரிய ஆதாரங்களுடன் கூடிய இந்த குற்றச்சாட்டு வெளியானதும் ஐஸ்லாந்து பிரதமர் சிக்முண்டுர் டேவிட், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரை தொடர்ந்து பல நாடுகளில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தலைவர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேட்டியளித்தார். அப்போது, தனது தந்தையின் சட்டவிரோத வெளிநாட்டு பண முதலீட்டில் பலன் அடைந்தது உண்மை என தெரிவித்தார்.
பஹாமாஸ் நாட்டிலுள்ள ஒரு நிதி நிறுவனத்தில் எங்கள் குடும்பம் 5 ஆயிரம் பங்குகளை வாங்கியிருந்தது. சுமார் 30 ஆயிரம் பவுண்டுகள் கொண்ட என்னுடைய பங்குகளை 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நான் விற்றுவிட்டேன்.
ஒருவேளை நான் நாட்டின் பிரதமராக பதவி ஏற்றால், எனக்கு தனிப்பட்ட முறையில் வர்த்தக நோக்கங்களும், முதலீடுகளின் மூலம் பணப்பலன்களை அடையும் கொள்கையும் இருப்பதாக எதிர்காலத்தில் பிறர் என்னை விமர்சிக்க கூடாது என்பதற்காக, நான் இந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்னதாகவே இந்த முடிவுக்கு வந்து, வெளிநாட்டில் இருந்த எனது பங்கு முதலீட்டை அப்போதே கைவிட்டேன் என டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.