Home Featured நாடு “இந்தியர் புளுபிரிண்ட்” – தலைமை இயக்குநராக என்.எஸ்.இராஜேந்திரன் நியமனம்!

“இந்தியர் புளுபிரிண்ட்” – தலைமை இயக்குநராக என்.எஸ்.இராஜேந்திரன் நியமனம்!

1085
0
SHARE
Ad

ns-rajendran

புத்ரா ஜெயா – கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்த இந்தியர் வியூகச் செயல் திட்டம் (இந்தியர் புளுபிரிண்ட்) தொடர்பில் சிறப்பு இலாகா ஒன்று பிரதமர் துறையில் தற்போது ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைமை இயக்குநராக டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் செயல்படுவார் என பிரதமர் துறை அலுவலகம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

செடிக் என்ற இந்தியர்களுக்கான சமூக, பொருளாதார உருமாற்றத்திற்காக இராஜேந்திரன் தலைமையில் செயல்பட்டு வந்த தனிப் பிரிவு இனி ஓர் இலாகாவாகச் செயல்படும். இந்தியர் புளுபிரிண்ட் அமுலாக்கங்கள் இந்தப் பிரிவின் கீழ் கொண்டு வரப்படும்.

#TamilSchoolmychoice

எதிர்வரும் மே 22-ஆம் தேதி முதல் இராஜேந்திரன் இந்தப் புதிய பொறுப்பினை ஏற்பார்.

இதற்கிடையில் புளுபிரிண்ட் அமுலாக்கத்திற்கான நிர்வாகக் குழுவுக்கு மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தொடர்ந்து தலைவராக இருந்து வருவார்.

இந்த நிர்வாகக் குழு மாதத்திற்கு ஒருமுறை கூடி, செடிக் அமைப்பின் அமுலாக்கங்களைக் கண்காணித்து வரும்.

மேலும் செடிக் இலாகாவுக்கு கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை மன்றம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு, இந்த மன்றத்தின் தலைவராக நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் முகமட் இர்வான் செரிகர் அப்துல்லா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தியர் புளுபிரிண்ட் தொடர்பான அமுலாக்கங்கள் மீது இந்த ஆலோசனை மன்றம் ஆலோசனை வழங்கி ஈடுபடும்.

அதே வேளையில், இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் தலைவராக பிரதமர் நஜிப் தொடர்ந்து பொறுப்பு வகித்து வருவார்.