Home நாடு பிஎஸ்எம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார் பவானி!

பிஎஸ்எம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார் பவானி!

1157
0
SHARE
Ad

ஈப்போ – 14-வது பொதுத்தேர்தலில், பேராக் மாநிலத்தில் உள்ள மாலிம் நாவார் தொகுதியில் பிஎஸ்எம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் வழக்கறிஞர் கே.எஸ்.பவானி.

இதற்கான அறிவிப்புகளை பிஎஸ்எம் கட்சி வெளியிட்டிருக்கிறது.

கடந்த 2013-ம் ஆண்டு, உத்தாரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற “பல்கலைக் கழக மாணவர்கள் அரசியலோடு நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்களா?” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியை வழங்க வேண்டுமென்று வலியுறுத்திப் பேசி ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இந்த கே.எஸ்.பவானி.

#TamilSchoolmychoice

அப்போது சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த பவானி, பிடிபிடிஎன் கல்விக் கடனுதவிக்கு எத்தனையோ கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் செய்வது போல், மற்ற செலவினங்களுக்கு ஒதுக்கீடு செய்வது போல், பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வி வழங்குவதற்கும் ஏன் அரசாங்கம் உதவி செய்யக் கூடாது என்று கேள்வி கேட்டார்.

அவருக்கு பதிலளித்த அந்த கருத்தரங்கின் நடுவரும் 1மலேசியா சுவாரா வனித்தா எனப்படும் ஒரே மலேசியா மகளிர் குரல் அமைப்பின் தலைவருமான ஷரிபா சோரா ஜபின், பவானியைப் பேசவிடாமல் தடுத்ததோடு, அந்த நாடுகளில் இலவசக் கல்வி வழங்குகின்றார்கள் என்றால் அந்த நாட்டுக்கே போக வேண்டியதுதானே? என்று பவானியை மட்டம் தட்டினார். ஷரிபாவின் கருத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

அதன் பின்னர், பிஎஸ்எம் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த பவானி, சட்டத்துறையில் தனது படிப்பை முடித்து கடந்த 2016-ம் ஆண்டு, ஈப்போ உயர்நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, 14-வது பொதுத்தேர்தலில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) கட்சி போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது.