
தாப்பா: தாப்பாவின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் ஆயர் கூனிங் சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் தேசிய முன்னணி நிறுத்தும் வேட்பாளரும், பெரிக்காத்தான் நேஷனல் அறிவித்திருக்கும் வேட்பாளரும் – இருவருமே உள்ளூரைச் சேர்ந்த இஸ்லாமிய மத அறிஞர்கள். உஸ்தாஸ் என அழைக்கப்படுபவர்கள்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் பாஸ் கட்சியின் அப்துல் முஹாய்மின் மாலிக் (வயது 43) ஆயர் கூனிங் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தாப்பா பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவருமாவார்.
இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 12) ஆயர் கூனிங் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கிறது. வாக்களிப்பு ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும்.
இந்த இரு கூட்டணிகளின் வேட்பாளர்களோடு போட்டியில் குதித்திருக்கிறது பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா கட்சி. அந்தக் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் கே.எஸ்.பவானி போட்டியிடுகிறார்.
இந்தப் போட்டியினால் இந்தத் தொகுதியிலுள்ள சுமார் 14 விழுக்காடு இந்தியர் வாக்குகள் எந்தப் போகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இருபுறமும் இஸ்லாமிய மத அறிஞர்கள் போட்டியிடுவதால், இந்தியர்கள் இந்திய வேட்பாளரான பவானிக்கு வாக்களிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
பிஎஸ்எம் கட்சி எப்படிப் பார்த்தாலும் வெற்றி பெற முடியாது என்பதுதான் உண்மை நிலவரம். ஆனால், அவர்கள் இந்திய வேட்பாளரை நிறுத்தியிருப்பதால் எத்தனை வாக்குகள் பெறுவார்கள் – அந்த இந்திய வாக்குப் பிளவால் – எந்தக் கூட்டணிக்குப் பாதிப்பு என்பதைக் காண அரசியல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் மூடா கட்சியும் போட்டியில் குதிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.