
செர்டாங் – செர்டாங் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் தமிழக எழுத்தாளர் கௌதம சன்னாவின் ‘குறத்தியாறு’ காப்பியப் புதினத்தின் வெளியீட்டு விழா, எதிர்வரும் 8.4.18 ஞாயிறன்று மாலை மணி 4.00 தொடக்கம் செர்டாங் ஸ்ரீமகா காளியம்மன் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் செந்தமிழ்ச்செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் தலைமையேற்று முதல் நூல் பெறுகிறார். இந்நிகழ்வில் டத்தோ எம்.இராஜன், வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.
தொன்மங்களைக் காப்பியமாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ள கௌதம சன்னாவின் இப்புதினம் தமிழக இலக்கிய ஆளுமைகளின் பாராட்டினைப் பெற்றுள்ளது. உள்ளடக்கத்திலும் புனைவு மொழியிலும் வழக்கங்களை மறுதலித்த படைப்பாக இப்புதினம் திகழ்கிறது.


நூல் குறித்த கண்ணோட்டங்களை பொ.அண்ணாமலை, பேராசிரியர் நா.கண்ணன், ந.பச்சைபாலன் ஆகியோர் வழங்குவர். முனைவர் க. சுபாஷினி (தமிழ்மரபு அறக்கட்டளை, ஜெர்மனி) தொன்மங்களை காப்பியமாக்கும் முயற்சிகள் எனும் தலைப்பில் ஆய்வுரை வழங்குவார்.
குறத்தியாறு காப்பிய மின்நூலை ‘பினா முத்து’ நிறுவனத்தின் சித்ரா எல்.முத்து வெளியிடுவார்.


காப்பியம் பிறந்த கதையை நூலாசிரியர், வழக்கறிஞர் கௌதம சன்னா ஏற்புரையாக வழங்குவார். நூல் வெளியீட்டில் திரட்டப்படும் நிதி, எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதியாக வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் சிறப்பு அங்கமாக, தமிழக அரசின் உலகத் தமிழ்ச் சங்க விருதினை அண்மையில் பெற்ற உலகத் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க.சுபாஷினி பாராட்டிக் கௌரவிக்கப்படுவார். முனைவர் மகேந்திரன் மணியம் நன்றியுரையாற்றுவார்.

இலக்கிய விருந்துகளுடன் கூடிய அரிய நிகழ்ச்சியாக மலரும் இந்நூல் வெளியீட்டு விழாவில் இனிய தமிழை நேசிக்கும் தமிழ் ஆர்வலர்களை, இலக்கிய மனங்களை அன்போடு அழைக்கிறார் ஏற்பாட்டுக்குழுவின் தலைவரும் செர்டாங் இலக்கிய வட்டத்தின் தலைவருமான இராஜேந்திரன் அண்ணாமலை.