Home இந்தியா பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக ஆளுநர்!

பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக ஆளுநர்!

1298
0
SHARE
Ad

சென்னை – அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, அதே கல்லூரில் படிக்கும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் குரல் பதிவு தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நிர்மலா தேவியின் குரல் பதிவில் அவர், ‘கவர்னர்.. தாத்தா இல்ல’ என்று அழுத்திக் கூறியதையடுத்து, இந்த விவகாரத்தில் அனைவரின் சந்தேகமும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது திரும்பியிருக்கிறது.

இதனையடுத்து, உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிய பன்வாரிலால், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, தான் நிர்மலா என்ற அந்தப் பெண்ணைப் பார்த்தது கூட கிடையாது என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், லஷ்மி என்ற பெண் நிருபர் பன்வாரிலாலிடம் கேள்வி ஒன்றைக் கேட்டதற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, அவரின் கன்னத்தைத் தட்டி, ‘நீ என் பெயர்த்தி மாதிரி’ எனப் பதிலளித்திருக்கிறார் பன்வாரிலால்.

இதனால் மிகவும் ஆத்திரமடைந்த அப்பெண் நிருபர், தனது டுவிட்டரில் புகைப்படத்தோடு இத்தகவலை வெளியிட்டு, தவறான நோக்கம் இல்லையென்றாலும், தனது அனுமதியின்றி ஆளுநர் கன்னத்தைத் தொட்டிருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கனவே, தமிழக ஆளுநர் மீது சந்தேகம் எழுந்திருக்கும் நிலையில், இச்சம்பவத்தின் மூலம் ஆளுநருக்கு எதிராக இன்னும் எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன.

பெண்கள் விவகாரத்தில் இது போல் ஆளுநர் பல்வாரிலால் புரோஹித்தின் பெயர் அடிபடுவது முதல் முறையல்ல.

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவை அருகே ஒரு கிராமத்தில் சுகாதார முறைகளை ஆய்வு செய்யச் சென்றார்.

அங்கு, பெண் ஒருவர் கீற்று மறைப்பில் குளித்துக் கொண்டிருக்க, ஆளுநர் அதனை விலக்கிப் பார்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.