Home தேர்தல்-14 பிகேஆர் கட்சியிலிருந்து 3-வது இந்திய அமைச்சரா?

பிகேஆர் கட்சியிலிருந்து 3-வது இந்திய அமைச்சரா?

1520
0
SHARE
Ad
புதிய மனித வள அமைச்சர் குலசேகரன்

கோலாலம்பூர் – முதல் கட்டமாக இன்று திங்கட்கிழமை மாமன்னரில் முன்னிலையில் பதவியேற்கப் போகும் அமைச்சரவைக் குழுவில் இரண்டு இந்திய அமைச்சர்கள் – கோபிந்த் சிங் டியோ மற்றும் எம்.குலசேகரன் – நியமிக்கப்பட்டுள்ளனர்.

2 அமைச்சர்கள் வேண்டும் என்ற இந்திய சமுதாயத்தின் நீண்டகாலக் கோரிக்கை மீண்டும் ஒருமுறை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தொடர்பு பல்ஊடக அமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் கோபிந்த் சிங் டியோ

எனினும், பதவியேற்கும் 2 அமைச்சர்களும் ஜசெகவைச் சேர்ந்தவர்கள். புதிய அமைச்சரவையில் ஜசெக சார்பில் ஓர் இந்திய அமைச்சரும், பிகேஆர் கட்சியின் சார்பில் இன்னொரு இந்திய அமைச்சரும் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆனால், தற்போது நியமிக்கப்பட்ட 2 அமைச்சர்களும் ஜசெகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது பிகேஆர் சார்பில் மேலும் ஓர் இந்திய அமைச்சர் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

தனது அமைச்சரவை 25 பேர்களைக் கொண்டு அடுத்த கட்டமாக விரிவாக்கம் செய்யப்படும் என பிரதமர் துன் மகாதீர் அறிவித்துள்ளார்.

இன்னொரு புறத்தில் அமைச்சரவையில் பிகேஆர் கட்சிக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற முணுமுணுப்புகளும் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

எனவே, அடுத்த அமைச்சரவை விரிவாக்க அறிவிப்பின்போது, பிகேஆர் சமர்ப்பிக்கப் போகும் அமைச்சர்களுக்கான பட்டியலில் ஓர் இந்திய அமைச்சர் இடம் பெறுவார் என பிகேஆர் தரப்புகள் தெரிவித்திருக்கின்றன.

பிகேஆர் சார்பில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா அல்லது கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் ஆகிய இருவரில் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படலாம்.

-இரா.முத்தரசன்