Home தேர்தல்-14 குலசேகரன் விளக்கம்: “தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் தலைப்பாகை அணிந்தேன்”

குலசேகரன் விளக்கம்: “தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் தலைப்பாகை அணிந்தேன்”

2355
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை பதவியேற்ற புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் சீக்கிய பாணியிலான தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

மற்றொரு இந்திய அமைச்சராகப் பதவியேற்ற கோபிந்த் சிங் டியோவும் இதே போன்று தனது சீக்கிய மத வழக்கப்படியான  தலைப்பாகை அணிந்து பதவியேற்றுக் கொண்டார்.

ஏன் தலைப்பாகையுடன் பதவியேற்றுக் கொண்டேன் என்பது குறித்து குலசேகரன் பிரி மலேசியா டுடே இணைய ஊடகத்திடம் விளக்கம் தந்துள்ளார்.

#TamilSchoolmychoice

“தலைப்பாகை அணிவது தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் நானும் தலைப்பாகை அணிந்து பதவியேற்றுக் கொண்டேன். இதற்கு முன் எனது திருமணத்தின்போது நான் தலைப்பாகை அணிந்தேன்” என்று குலசேகரன் கூறியிருக்கிறார்.

வழக்கமாக, இந்துத் திருமணங்களிலும் தமிழர் திருமணங்களிலும், தலைப்பாகை அணிந்து மணவறையில் மணமகன் அமரும் பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது.

வழக்கமாக மஇகாவைச் சேர்ந்த இந்திய அமைச்சர்கள் மாமன்னர் முன்னால் பதவியேற்கும்போது மரியாதைக்காக சொங்கோக் எனப்படும் மலாய் பாரம்பரிய குல்லாய் அணிந்து பதவியேற்பர்.

ஆனால், இன்று அமைச்சராகப் பதவியேற்ற குலசேகரன் தலைப்பாகையுடன் பதவியேற்றார்.

தமிழர் பாரம்பரியத்தைப் பின்னோக்கிப் பார்த்தால், பாரதியார் முதற்கொண்டு, கப்பலோட்டியத் தமிழன் வஉசி சிதம்பரம் வரையில் பலரும் தலைப்பாகை அணிந்து உலா வந்தனர் என்பது வரலாற்று உண்மை.

இதன் மூலம் ஒரு புதிய பாரம்பரியம் அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவில் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.