Home நாடு ஷாரிர் சமாட்டும் ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்

ஷாரிர் சமாட்டும் ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்

973
0
SHARE
Ad
ஷாரிர் சமாட் – கோப்புப் படம்

புத்ரா ஜெயா – முன்னாள் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பெல்டா தலைவருமான ஷாரிர் அப்துல் சமாட் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை தந்து வாக்குமூலம் வழங்கினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி வருகைக்காக அங்கு குவிந்திருந்த ஊடகவியலாளர்கள் எதிர்பாராதவிதமாக ஷாரிர் அங்கு வருகை தந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

காலை 9.40 மணிக்கு சாஹிட் வருவதற்கு முன்பே ஷாரிர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகம் வந்தடைந்தார்.

#TamilSchoolmychoice

பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஷாரிர் “நிதிகளைப் பெற்றதாக ஒப்புக் கொண்டது” தொடர்பில் தனது வாக்குமூலத்தை வழங்கத் தான் அழைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். எனினும், விரிவான விவரங்களை வழங்க அவர் மறுத்து விட்டார்.

வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் வெளியே வந்தபோது மீண்டும் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஷாரிர், நஜிப் துன் ரசாக்கிடம் இருந்து 1 மில்லியன் ரிங்கிட் பெற்றது தொடர்பில் தன் மீது விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

2013-ஆம் ஆண்டில் ஜோகூர் பாருவில் அரசியல் பணிகளை மேற்கொள்ள நஜிப்பிடம் இருந்து 1 மில்லியன் நிதியைப் பெற்றதாக ஷாரிர் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தார்.

“நான் நஜிப்பைச் சந்தித்து நிதியைக் கோரியபோது அவர் அம்னோ தலைவராக இருந்தார். அரசியல் பணிகளுக்காக நிதி கோருவது தவறான ஒன்றல்ல” எனக் கூறிய ஷாரிர் அந்தப் பணத்தைத் தான் 2013 நவம்பரில் காசோலையாகப்  பெற்றதாகவும், அந்தப் பணம் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஷாரிரின் வங்கிக் கணக்கும் முடக்கம்

தனது சொந்த வங்கிக் கணக்கும், ஜோகூர் பாரு அம்னோவின் வங்கிக் கணக்கும் ஊழல் தடுப்பு ஆணையத்தால் முடக்கப்பட்டிருப்பதையும் ஷாரிர் மேலும் தெரிவித்தார்.