Home நாடு ஆளும் கட்சிக்கு நிகரான எதிர்க்கட்சி ஒன்று நிலைக்க வேண்டும்!- ரபிசி ரம்லி

ஆளும் கட்சிக்கு நிகரான எதிர்க்கட்சி ஒன்று நிலைக்க வேண்டும்!- ரபிசி ரம்லி

1022
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த சில நாட்களில் அம்னோ கட்சியை விட்டு பெரும்பாலான நாடாளுமன்றத் தலைவர்கள் வெளியேறுவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வகையில், முன்னாள் பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் மற்றும் முன்னாள் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி , கைரி ஜமாலுடினுக்கு கடிதம் ஒன்றினை நேற்று எழுதியிருந்தார்.

கட்சி குழப்ப நிலையில் உள்ள போது இவ்வாறு அதிகமானோர் கட்சியை விட்டு வெளியேறுவது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். கடந்த 2010-ல் பி.கே.ஆர் கட்சியில் இதே மாதிரியான சூழல் ஏற்பட்டதையும் ரபிசி நினைவுப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

மேலும் குறிப்பிட்ட ரபிசி, இந்நாட்டிற்கும், மக்களுக்கும் திறமையான, புத்திசாலியான, நேர்மையான, நம்பகமான எதிர்க்கட்சி ஒன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுப்படுத்தினார். மேலும், கைரியை மற்றவர் போல் கட்சியை விட்டு வெளியேற வேண்டாமென்றும், அக்கடிதத்தில் ரபிசி கேட்டுக் கொண்டார்.

பலவீனமான எதிர்க்கட்சிகள் இருக்குமாயின், தற்போதைய அரசாங்கம் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு வழிவகுத்து விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அவ்வாறான சூழலை நாம் 61 வருடமாக எதிர்கொண்டு விட்டதாகவும் ரபிசி தெரிவித்தார்.

கடந்த காலத்தை மறந்து, அம்னோ, மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் நன்முறையில் கேட்டு, அவர்களுக்கு உண்மையுடன் சேவை செய்ய வேண்டும் எனவும், எந்தவொரு எதிர்க்கட்சியையும் கலைக்கும் முயற்சிக்கு தாம் உடன்பட போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“எதிர்காலத்தில் நல்ல மற்றும் அமைதியான மலேசிய அரசியலைப் பார்க்க விரும்பும் பல இளைஞர்களுடைய நம்பிக்கைத் தலைவராக நீங்கள் திகழ்கிறீர்கள்” என ரபிசி புகழாரம் சூட்டினார்.

அதற்காக, அம்னோவில் கைரி தொடர்ந்து இருக்க வேண்டுமெனவும், அம்னோவை சிறந்த எதிர்க்கட்சியாக நிலை நிறுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.