கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை மூன்றாவது நாளான இன்று செவ்வாய்க்கிழமை தொடரப்பட்டது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் ஊழல் விசாரணைக்குத் தொடர்புடையவை என நம்பப்படும் வங்கி ஆவணங்கள் மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் ஆவணங்கள், கடந்த 2015-ஆம் ஆண்டில் அம்பேங் வங்கியிலிருந்து பெறப்பட்டதாக தேசிய வங்கியின் மேலாளர் அசிசுல் அட்சானி நேற்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
2001-ஆம் ஆண்டுக்கான பண மோசடி, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் அவரும், மூன்று அதிகாரிகளும் குறிப்பிட்ட அவ்வங்கியை சோதனை செய்ததாக அவர் கூறினார். அவ்வாறு பரிசோதானைக்கு இரண்டு குழுக்கள், ஜாலான் ராஜா சூளான் கிளையில் அமைந்துள்ள அம்பேங்கில் சோதனையை மேற்கொண்டதாக அசிசுல் தெரிவித்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி காலை மணி 9 தொடங்கி காலை 11 மணி வரையிலும் அவரது குழு சோதனையில் இருந்ததாகவும், பின்பு மற்றொரு குழு சோதனையை முடிக்கும் வரையிலும், அதாவது இரவு மணி 9 மணியளவிலும் காத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அதே நாளில் அவ்வங்கியில் சோதனை செய்ய, இந்த இரண்டுக் குழுவைத் தவிர்த்து வேறெந்தக் அணியாவது சோதனை செய்ய வந்திருந்தா என்பதைப் பற்றி அவர் உறுதியாக தெரியவில்லை எனக் கூறினார்.
இதனிடையே, முன்னாள் பிரதமர் நஜிப், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் இதர நிறுவனங்களின் ஆறு வங்கிக் கணக்குகளில் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்களைப் பெறுவதற்கு தமக்கு எந்த ஒரு கட்டளையும் இடப்படவில்லை என அசிசுல் தெரிவித்தார்.
அந்த ஆவணங்களை அவ்வங்கி கிளையின் மேலாளரான ஆர். உமா தேவிதான் தம்மிடம் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார். உமா தேவியிடம் இருந்து அக்குறிப்பிட்ட விவரங்களை அவர் கேட்டுப் பெற்றாரா என வழக்கறிஞர் வினவிய போது, அவர் அவ்வாறு கேட்கவில்லை எனக் கூறினார்.
“சோதனையின்போது, நான் இந்த விசாரணையைப் பற்றிய அனைத்து கோப்புகளையும்தான் கேட்டேன். அதற்குப் பிறகு இந்த எட்டு கோப்புகளும் வழங்கப்பட்டன. பின்பு, அவராகவே, குறிப்பிட்ட ஆறு வங்கிக் கணக்குகளின் விவரங்களைக் கொடுத்தார்” என அசிசுல் கூறினார்.





