சான் ஓசே நகரில் ஜூன் 3 தொடங்கி ஜூன் 7-ஆம் தேதிவரை நடைபெறும் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்துலக மேம்பாட்டாளர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள முத்து நெடுமாறன் அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ் கல்விக் கழகம்
அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அங்கு பிறந்த குழந்தைகளுக்கு தமிழைக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டது இந்த அமைப்பாகும்.


இந்த நோக்கத்திற்காக சம்பந்தப்பட்ட மாநிலக் கல்வி வாரியங்களோடு இணைந்து செயலாற்றிய இந்த அமைப்பு, தங்களிடம் படிக்கும் மாணவர்கள் பெறும் தேர்ச்சி புள்ளிகளை அவர்களின் மைய பள்ளிப் பாடங்களுக்கான தேர்வுகளில் இணைத்துக் கொள்ள அங்கீகாரம் பெறும் நோக்கில் பெரும் பங்காற்றியது.
இன்று இந்த அமைப்பு வார இறுதி நாட்களில் நடத்தும் சிறப்பு தமிழ் வகுப்புகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர். கலிபோர்னியா தமிழ் அகாடமி கற்பிக்கும் பாடங்களுக்கென பிரத்தியேக பாடத் திட்டங்களை அந்த அமைப்பு கொண்டிருக்கிறது. மாணவர்கள் இங்கே கல்வி கற்பதோடு, தேர்வுகளுக்கும் அமர்ந்து தங்களுக்கான தேர்ச்சி புள்ளிகளைப் பெறுகின்றனர்.
இந்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி கலிபோர்னியா தமிழ் அகாடமி, 20-ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. சான் ஓசே நகரில் நடைபெற்ற இந்த அமைப்பின் 20-ஆம் ஆண்டு விழா, நகரின் பூங்கா ஒன்றில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக அந்தப் பூங்கா தற்காலிகமாக பொதுமக்களுக்காக மூடப்பட்டது. பெற்றோர்கள், மாணவர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழா இரண்டு கருத்தரங்குகளாக நடைபெற்றது. முழுக்க முழுக்க தமிழிலேயே பேசி நடத்தப்பட்ட முதல் கருத்தரங்கத்தை இந்த அகாடமியின் முன்னாள் மாணவர்களே நடத்தினர்.
முத்து நெடுமாறனின் உரை
உலகத் தமிழ்க் கல்விக் கழகம், கலிபோர்னியா தமிழ் அகாடமியாகச் செயல்பட்ட காலத்திலிருந்து இந்த அமைப்போடு நெருக்கமாகப் பணியாற்றி வந்துள்ளதோடு, அந்த அமைப்பின் பல நிகழ்ச்சிகளிலும் ஏற்கனவே கலந்து கொண்டுள்ள முத்து நெடுமாறன் இந்த 20-ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழாவின் சில படக் காட்சிகள்: