Home நாடு இந்திரா காந்தி கணவருக்கு ஜாகிர் நாயக் ஆதரவாளர்கள் பாதுகாப்பா? நிரூபியுங்கள் – சம்ரி வினோத் தற்காக்கிறார்

இந்திரா காந்தி கணவருக்கு ஜாகிர் நாயக் ஆதரவாளர்கள் பாதுகாப்பா? நிரூபியுங்கள் – சம்ரி வினோத் தற்காக்கிறார்

668
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பெர்லிசைச் சேர்ந்த மதபோதகரும் அண்மையில் சில சர்ச்சைகளில் சிக்கியவருமான சம்ரி வினோத் இந்திரா காந்தி விவகாரத்தில் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பதோடு, ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகளையும் தற்காத்திருக்கிறார்.

இந்திரா காந்தியைப் பிரதிநிதிக்கும் ‘இங்காட்’ என்ற குழுவின் சார்பில் நேற்று நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில், முஸ்லீமாக மதம் மாற்றம் கண்ட தனது முன்னாள் கணவர் பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லா, தனது மகள் பிரசன்னாவை மறைத்து வைக்கவும், தலைமறைவு வாழ்க்கை வாழவும், சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்களும் பாஸ் கட்சியின் ஆதரவு குழுக்களும் பாதுகாப்பையும், பண உதவியையும் செய்து வருகின்றன என இந்திரா காந்தியின் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், தென் தாய்லாந்தில் இயங்கிவரும் பிரிவினை வாத தீவிரவாதக் குழுக்களுக் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் என இந்திரா காந்தியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘இங்காட்’ (Indira Gandhi Action Team –Ingat) என்ற இயக்கத்தின் சார்பில் அருண் துரைசாமி நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பில் பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் இந்திரா காந்தி செய்திருப்பதாக அருண் துரைசாமி தெரிவித்தார். பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவல்களில் அடிப்படையில் தாங்கள் இந்தப் புகாரைச் செய்திருப்பதாகவும், காவல் துறையினர் தங்களின் புலனாய்வு விசாரணைகளை இதனை அடிப்படையாக வைத்து நடத்த வேண்டும் என்றும் அருண் கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் சம்ரி வினோத் கூறிய கருத்துகளை பிரி மலேசியா டுடே வெளியிட்டுள்ளது. “ஜாகிர் நாயக் ஆதரவாளர்கள் காவல் துறையினரால் தேடப்படும் முகமட் ரிடுவான் அப்துல்லாவையும், அவரது மகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் குழுவினர் அதனை நிரூபிக்க வேண்டும்” என சம்ரி வினோத் கூறியுள்ளார்.

சம்ரி வினோத் ஜாகிர் நாயக்கின் மாணவராவார். “தேவையில்லாமல் அருண் துரைசாமி ஜாகிர் நாயக்கை இந்த விவகாரத்தில் இழுத்துள்ளார். ஆணித்தரமில்லாத, மேம்போக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். ஜாகிர் நாயக்கிற்கு மில்லியன் கணக்கான ஆதரவாளர்கள், பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்தால் அவர்கள் அனைவர் மீதும் நீங்கள் தவறான, எதிர்மறையான கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறீர்கள்” என சம்ரி கருத்துரைத்துள்ளார்.