Home One Line P2 வாரன் பஃபெட்டை முந்தினார் முகேஷ் அம்பானி

வாரன் பஃபெட்டை முந்தினார் முகேஷ் அம்பானி

588
0
SHARE
Ad

மும்பை – ஏற்கனவே உலகின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் முகேஷ் அம்பானி, தற்போது உலகின் மற்றொரு பணக்காரரான வாரன் பஃபெட்டைப் பின்னுக்குத் தள்ளி 8-வது பணக்காரராக தனது நிலையை உயர்த்தியிருக்கிறார்.

89 வயதான வாரன் பஃபெட் உலகின் 8-வது பணக்காரராகவும், அம்பானி 9-வது நிலையிலும் இருந்தனர். அடுத்தடுத்து அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், அதன் துணை நிறுவனமான ஜியோ பிளாட்போர்ம் ஆகியவற்றுக்கு புதிய முதலீடுகள் கிடைத்தன.

கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலகமெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து அம்பானி பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து அவரது ரிலையன்ஸ், கடன்களற்ற நிறுவனமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் 19 வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி ரிலையன்ஸ் தற்போது தனது நிறுவனக் கடன்களை முழுவதுமாக அடைத்து விட்டதாக முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஆகக் கடைசியாக, அம்பானியின் பெட்ரோலிய வணிக நிறுவனத்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கிறது.

அம்பானி முன்னெடுத்த முதலீடுகளினால் இந்த ஆண்டில் ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் அதிகமான முதலீடுகளை ஈர்த்த நாடாக இந்தியா திகழ்கிறது. மொத்த முதலீட்டில் 12 விழுக்காடு இந்தியாவைச் சென்றடைந்திருக்கிறது. இதில் பெரும்பகுதி அம்பானியின் நிறுவனங்களுக்குச் சென்றுள்ளன.

இத்தகைய முதலீடுகளினால் அவரது நிறுவனத்தின் பங்குகளும் இரண்டு மடங்காக விலையுயர்ந்திருக்கின்றன.

150 பில்லியன் டாலர்களுக்கும் மேற்பட்ட சந்தை மதிப்பைக் கொண்ட முதல் இந்திய நிறுவனமாக அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவெடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவரது மதிப்பு 68.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. வாரன் பஃபெட்டின் மதிப்பு 67.9 பில்லியன் டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு சரிவு ஏன்?

புளும்பெர்க் வணிக ஊடகத்தின் மதிப்பீட்டின்படி ஜூலை 9-ஆம் தேதியோடு அம்பானி வாரன் பஃபெட்டை முந்தியிருக்கிறார்.

ஆனால், வாரன் பஃபெட்டின் சொத்துகள் மதிப்பு குறைந்ததற்கு ஓர் உன்னதமான நல்ல காரணமும் இருக்கிறது. தனது சொத்தில் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வாரன் அறப்பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

2006-ஆம் ஆண்டு முதல் தனது பெர்க்‌ஷையர் ஹாத்தாவே நிறுவனத்தின் பங்குகளை அறப்பணிகளுக்கு வந்திருக்கிறார் வாரன்.

இதுவரையில் 37 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய பெர்க்‌ஷையர் பங்குகளை அவர் அறப்பணிகளுக்காக வழங்கியிருக்கிறார்.

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் அம்பானி

ஏற்கனவே, ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக அம்பானி உயர்ந்திருக்கிறார். எனினும் ஆசியப் பணக்காரர்களில் யாருமே இதுவரையில் உலகின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராக இடம் பெறவில்லை.

அந்தப் பெருமையை அம்பானி மட்டுமே பெற்றிருக்கிறார்.

அம்பானியின் நிறுவனங்கள் – சொத்துகள்

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தொலைத் தொடர்பு மற்றும் செல்பேசி சேவைகள் நிறுவனமான ஜியோ தற்போது சுமார் 400 மில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கிறது.

எதிர்வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கைப்பேசி சந்தாதாரர்கள் சந்தையில் 48 விழுக்காட்டை அம்பானியின் நிறுவனம் கைப்பற்றும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42 விழுக்காடு பங்குகளை கொண்டிருக்கிறார் 63 வயதான முகேஷ் அம்பானி.

தனது செல்வச் செழிப்பு வளமைக்கு ஏற்ப ஆடம்பரமான அவரது இல்லம் மும்பையில் அமைந்திருக்கும் 27 மாடி பிரம்மாண்டமானக் கட்டடமாகத் திகழ்கிறது.

அதில் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கான மூன்று தளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கட்டிடத்தைச் சுற்றி 168 கார்கள் நிறுத்தப்படும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஐம்பது பேர் அமரக்கூடிய திரையரங்கு; ஒரு பிரம்மாண்டமான விழா மண்டபம்; மதிப்புமிக்க அழகான தொங்கு சர விளக்குகள்; மூன்று மாடிகளைக் கொண்ட தோட்டக் கலையுடன் கூடிய பூங்கா; யோகா பயிற்சி நிலையம்; சுகாதாரக் குளியல் (SPA) வளாகம்; உடற்பயிற்சிக் கூடம் என பல்வேறு வசதிகளை கொண்டிருக்கிறது அவரது இல்லம்.

தந்தையின் வழியில்…தனயன்

திருபாய் அம்பானி

அமெரிக்காவின் வணிகத்துறை கல்விக்குப் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர் முகேஷ் அம்பானி. 1980-ஆம் ஆண்டில் அவரது தந்தையார் திருபாய் அம்பானி உருவாக்கிய வணிக சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க உதவி புரிய, அவர் இந்தியா திரும்பினார்.

முதலில் அவரும் அவரது இளைய சகோதரர் அனில் அம்பானியும் இணைந்து தங்களின் வணிகப் பயணத்தை மேற்கொண்டனர்.

2002 ஆம் ஆண்டில் திருபாய் அம்பானி திடீரென மாரடைப்பால் காலமானார். அவர் தனது சொத்துகள் குறித்து உயில் எதனையும் விட்டுச் செல்லவில்லை.

அவரது தந்தையாரின் மரணத்திற்குப் பின்னர் இரண்டு சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அம்பானி நிறுவனங்களின் சொத்துகள் பாகப்பிரிவினை செய்யப்பட்டன.

அதன் பின்னர் முகேஷ் அம்பானி அசுர வளர்ச்சி கண்டார். ஆனால் அவர் அளவுக்கு அனில் அம்பானி வணிகத்தில் வளரவில்லை.

அனில் அம்பானியும் அவரது நிறுவனங்களும் கடன்களில் சிக்கித் தவிக்கின்றனர். அவரும் தனது சொத்துக்களில் பெரும் பகுதியை இழந்திருக்கிறார். ஆனால் அவரது சொந்த மூத்த சகோதரரோ உலகின் முதல் 8-வது மிகப் பெரிய பணக்காரராக உயர்ந்திருக்கிறார்.