Home One Line P1 முக்ரிஸ் மகாதீர் மகளும் மருமகனும் கைது

முக்ரிஸ் மகாதீர் மகளும் மருமகனும் கைது

1075
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை  மீறியதற்காக முக்ரிஸ் மகாதீரின் மகளும் மருமகனும்  காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து முக்ரிஸ் மகாதீர் தனது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா துன் டாக்டர் இஸ்மாயில் பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில்  காவல்துறையினர் அதிகாலை 1.20 மணியளவில் சோதனை நடத்தினர். அங்கிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

கைது செய்யப்பட்டவர்களில் முக்ரிஸ் மகாதீரின் மகளும் மருமகனும் அடங்குவர். விடுதியில் இருந்த 29  பேர்களுக்கும் காவல்துறையினர் தலா ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தனர்.

“கைது செய்யப்பட்ட எனது மகளுக்கும் மருமகனுக்கும் அதிகபட்ச அபராதம் ஆயிரம் ரிங்கிட் விதிக்கப்பட்டது நியாயமே” என்றும் முக்ரிஸ் மகாதீர் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது அனைவருக்கும் முன்னுதாரணமாக சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தனது குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கியதாக முக்ரிஸ் மகாதீர் தெரிவித்தார்.

தனது ஆலோசனையை மீறி தனது குடும்பத்தினர் நடந்துகொண்டது குறித்து தான் ஏமாற்றம் அடைவதாகவும் அதனால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது சரிதான் என்றும் முக்ரிஸ் மேலும் கூறினார்.

சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது பத்திரிகையாளர்களிடம் முக்ரிஸ் இதனைத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தினால் தங்களின் சிலிம் இடைத் தேர்தலுக்கான வெற்றி வாய்ப்புகள் சற்றும் பாதிக்கப்படாது என்றும் முக்ரிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில் சோதனைக்குப் பின்னர் நடைபெற்ற விசாரணையின்போது அந்த விடுதி முறையான வணிக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டிருக்கிறது என்பதும் கண்டறியப்பட்டது.