Home One Line P2 டிக் டாக் குறுஞ்செயலியை வாங்குவதற்கு வால்மார்ட் இணைகிறது

டிக் டாக் குறுஞ்செயலியை வாங்குவதற்கு வால்மார்ட் இணைகிறது

675
0
SHARE
Ad

வாஷிங்டன்: சீனாவின் குறுஞ்செயலியான டிக் டாக்கை வாங்குவதற்கு ஏற்கனவே முனைந்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து கைகோர்க்க வால்மார்ட் முன்வந்திருக்கிறது.

வால்மார்ட் அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை வணிகம் மற்றும் பேரங்காடி வளாகங்களை நடத்தும் மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.

டிக் டாக் குறுஞ்செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கிடையில் மைக்ரோசாப்ட், டிக்டாக் குறுஞ்செயலியை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியது. பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன.

#TamilSchoolmychoice

டிக் டாக்அடுத்த 45 நாட்களுக்குள் விற்பனை செய்யப்படுவதற்கும் அதுவரையில் அதன் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும்  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இந்த 45 நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்தி சீனாவின் அந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டுமென அவர் அவகாசம் வழங்கியிருக்கிறார்.

இந்த விற்பனை ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலுள்ள டிக்டாக் வணிக செயல்பாடுகளை மைக்ரோசாப்ட் வாங்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

டிக்டாக் பயனர்களின் அனைத்து தனிப்பட்ட சொந்த தரவுகளும் அதற்குப் பின்னர் அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டு, அங்கேயே பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.

சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை

சீனாவின் பைட் டான்ஸ் (ByteDance) என்று நிறுவனத்தை உரிமையாளராகக் கொண்டிருப்பதாலும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதாலும் அந்தக் குறுஞ்செயலி தடை செய்யப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். பைட் டான்சின் முதலீட்டாளர்களில் 70 விழுக்காட்டினர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த சூழ்நிலையில்தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து டிக் டாக் நிறுவனத்தை வாங்குவதற்கு வால்மார்ட் முன்வந்துள்ளது.

வால்மார்ட் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதற்கு அதற்கென சில வணிகக் காரணங்கள் இருக்கின்றன.

இணையவழி வணிகத்தையும், விளம்பர யுக்திகளையும், திறனையும் ஒருங்கிணைத்து பல்வேறு சந்தைகளில் ஊடுருவும் ஆற்றலை டிக் டாக் கொண்டிருப்பதால் அதனை இணைந்து வாங்குவதற்கு வால்மார்ட் ஆர்வம் கொண்டிருக்கிறது.

மைக்ரோசாப்ட் – வால்மார்ட் இணைந்த கூட்டணி அமெரிக்க டிக் டாக் பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்பதுடன் அமெரிக்க அரசாங்க நிபந்தனைகளையும் நிறைவேற்றும் என கருதப்படுகிறது.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 100 மில்லியன் பயனர்களை டிக்டாக் கொண்டிருக்கிறது.

பதவி துறந்த டிக்டாக்கின் தலைமைச் செயல் அதிகாரி

இதற்கிடையில் டிக் டாக் தலைமைச் செயல் அதிகாரி கெவின் மேயர் தனது பதவியைத் துறந்திருக்கின்றார்.

பதவி விலகுவதற்கு முன்னர் தனது ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் கெவின் மேயர். அந்தக் கடிதத்தில், அடுத்த வாரத்திற்குள் டிக்டாக் விற்பனை செய்யப்படுவது மீதான இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக கெவின் மேயர் தெரிவித்திருக்கிறார்.

டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான கெவின் மேயர் நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக டிக் டாக் வழக்கு

சீனாவின் டிக்டாக் குறுஞ்செயலியைத் தடை செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அந்நிறுவனம் வழக்கு தொடுத்து இன்னொரு கோணத்தில் தனது போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.

இதற்கான வழக்கை கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) டிக்டாக் கலிபோர்னியா நீதிமன்றத்தில் பதிவு செய்தது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடைபெறும் வணிகப் போரின் உச்ச கட்டமாக இந்த வழக்கு பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் டிக்டாக் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரும் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராகத் தனியாக மற்றொரு வழக்கைத் தொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்தில் கணினித் துறையில் பணியாற்றும் பேட்ரிக் ரயான் என்பவர் டிக்டாக்கைத் தடை செய்யும் டொனால்ட் டிரம்பின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார்.

“நாங்கள் வழக்கு நடத்துவதற்குப் பதிலாக ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தவே விரும்புகிறோம். ஆனால் எங்களின் அமெரிக்க வணிகத்தை முழுவதுமாக முடக்கி விட்டு, நாங்கள் உருவாக்கியிருக்கும் 10 ஆயிரம் பணியிடங்களை அழிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே வழக்கு தொடுத்துப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என டிக்டாக் அறிக்கை ஒன்றின்வழி தெரிவித்தது.

இந்தியாவும் ஏற்கனவே டிக் டாக் குறுஞ்செயலியை தடை செய்திருக்கிறது.