Home One Line P1 ‘சபாவுக்கு எதிரான பிலிப்பைன்சின் கோரிக்கையை மலேசியா கலந்து பேசாது’- ஹிசாமுடின்

‘சபாவுக்கு எதிரான பிலிப்பைன்சின் கோரிக்கையை மலேசியா கலந்து பேசாது’- ஹிசாமுடின்

818
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபாவுக்கு எதிராக பிலிப்பைன்சின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் மீண்டும் வலியுறுத்தினார்.

அதன் கூற்று ஆதாரமற்றது, பொருத்தமற்றது என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக சபா முதலமைச்சர் முகமட் ஷாபி அப்டாலின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஹிஷாமுடின், இந்த பிரச்சனையை தீர்க்க இரு அரசாங்கங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கோரிய ஷாபியின் அறிக்கையை கேள்விக்குட்படுத்தினார்.

#TamilSchoolmychoice

“பிலிப்பைன்சின் கோரிக்கைகள் ஆதாரமற்றவை மட்டுமல்ல, முற்றிலும் பொருத்தமற்றவை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை மலேசியா அங்கீகரிக்கவில்லை.

“எனவே, நாங்கள் அவர்களுடன் கலந்தாலோசிக்க எந்த காரணமும் இல்லை.

“நாங்கள் ஒரு பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், அதாவது மலேசியா கோரிக்கைக்கு ஓர் அடிப்படை இருப்பதை ஒப்புக்கொள்கிறது என்ற பொருள் வந்துவிடும். பிலிப்பைன்சின் கோரிக்கைகள் நியாயமானவை என்று ஷாபி உண்மையில் நினைக்கிறாரா? ” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஆகஸ்ட் 28 தேதியிட்ட செய்தி அறிக்கையின்படி, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கங்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு ஷாபி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. இரு நாடுகளிக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இல்லாத வரையில், பிலிப்பைன்ஸ் சபா மீதான சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

மலேசியாவில் சபாவின் நிலைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

ஷாபி இந்த விவகாரத்தில் உறுதியாக இருக்க வேண்டும், சபாவின் இறையாண்மையை கேள்விக்குட்படுத்த முயற்சிப்பவர்கள் மீது மென்மையாக இருக்கக்கூடாது என்று ஹிஷாமுடின் கூறினார்.

“இதற்கு முன், நான் பலமுறை வலியுறுத்தினேன். சபா மீதான பிலிப்பைன்ஸ் கூற்று ஏற்றுக் கொள்ளப்படாது, சபா என்றென்றும் மலேசியாவுக்கு சொந்தமானது.

“எனவே, மலேசிய அரசாங்கம் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்குமாறு வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் சமீபத்தில் பரிந்துரைத்தபோது நான் ஏமாற்றமடைந்தேன்,” என்று அவர் கூறினார்.