Home One Line P1 ‘அம்னோவை நம்ப வேண்டாம் என்று மொகிதினை எச்சரித்தேன்’- மகாதீர்

‘அம்னோவை நம்ப வேண்டாம் என்று மொகிதினை எச்சரித்தேன்’- மகாதீர்

561
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்திற்கு அம்னோவிடம் இருந்து பெறும் ஆதரவு நிபந்தனைகளுடனானது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மொகிதின் யாசினை எச்சரித்ததாகக் கூறினார்.

அம்னோவுடன் ஒத்துழைப்பது குறித்து தாம் மொகிதினுக்கு அவர் அளித்த அறிவுரை கவனிக்கப்படவில்லை என்று மகாதீர் தெரிவித்தார்.

“அம்னோ உடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக மொகிதின் கூறியிருந்தார். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அம்னோவால் அச்சுறுத்தப்படலாம் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இப்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவைக் கொண்டுள்ளதாகவும், புதிய அரசாங்கத்தை உருவாக்கத் தயாராக உள்ளார் என்ற கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக மகாதீர் இதனைக் கூறினார்.

இதனிடையே, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் அறிக்கையில் நம்பிக்கை இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தெரிவித்திருந்தார்.

2008- ஆம் ஆண்டில் அன்வார் இதே கருத்தினை முன்வைத்தார், ஆனால் அது நிறைவேறவில்லை என்று மகாதீர் கூறினார்.

“இது நிரூபிக்கப்படாத உரிமைகோரல்களின் மற்றொரு அத்தியாயமா என்பதைப் பார்க்க நாம் காத்திருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அன்வார் தனக்கு வலுவான மற்றும் உறுதியான பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறினார். ஆனால், அவருக்கு ஆதரவாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் ஆதரவை முதலில் மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாத்துடினிடம் ஒப்படைப்பது மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறினார்.

“ஆதரவு வலுவானது மற்றும் உறுதியானது. நான்கு, ஐந்து அல்லது ஆறு அல்ல, ஆனால் அதிகமான பெரும்பான்மை” என்று அவர் கூறினார்.

தேசிய கூட்டணியின் தலைவர்கள் அன்வாரின் குற்றச்சாட்டுகளை மறுத்த நிலையில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தனது கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் தலைவருக்கு ஆதரவாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.

இதேபோன்ற வளர்ச்சியில், அமானா மற்றும் ஜசெக புதிய அரசாங்கத்தை அமைக்க அன்வாருக்கு போதுமான ஆதரவு இருந்தால், தங்கள் கட்சி அவரை ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளன.