Home One Line P1 ‘சபா தேர்தலில் பிகேஆர் வெல்வதற்கு அன்வாரின் பிரச்சாரம்’- அனிபா அமான்

‘சபா தேர்தலில் பிகேஆர் வெல்வதற்கு அன்வாரின் பிரச்சாரம்’- அனிபா அமான்

552
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான ஆதரவு இருப்பதாக தாம் நம்பவில்லை என்று சபா பார்ட்டி சிந்தா (பிசிஎஸ்) தலைவர் அனிபா அமான் தெரிவித்தார்.

உண்மையில், சபா மாநிலத் தேர்தல் நடக்க இருப்பதால், அன்வார் நேற்று திடீரென கூறிய பெரும்பான்மை ஆதரவு வெறும் பிரச்சாரம் என்று அனிபா கூறினார்.

“தேர்தலில் பிகேஆருக்கு வாக்குகளைப் பெறுவதற்காக இது கூறப்பட்டது” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பிரதமராக மொகிதின் யாசினுக்கு சரவாக் கூட்டணி கட்சி (ஜி.பி.எஸ்) தனது ஆதரவை வெளிப்படுத்தியதால், அன்வாருக்கு வலுவான ஆதரவு கிடைப்பது சாத்தியமில்லை என்றும் அனிபா கூறினார்.

“கணித ரீதியாக, இது சரியல்ல” என்று அனிபா கூறினார்.

நேற்று, அன்வார் இப்ராகிம் கோலாலம்பூரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்கு வலுவான ஆதரவு இருப்பதாக அறிவித்து, மொகிதின் யாசின் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விட்டதாகக் கூறினார்.

அன்வாரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி பல அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவை வெளிப்படுத்தியதாக ஒப்புக்கொண்டார்.

“அம்னோ மற்றும் தேசிய முன்னணி ஆகியவை தேசிய கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகள் அல்ல. தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே. அம்னோ மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வார் இப்ராகிமை ஆதரிக்க முடிவு செய்ததிலும் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுவதை, அம்னோ, தேசிய முன்னணிக்குத் தடுக்க உரிமையில்லை” என்றும் சாஹிட் கூறியிருந்தார்.

“பல அம்னோ, தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை நான் மதிக்கிறேன், ”என்று சாஹிட் ஹமிடி  ஓர் அறிக்கையில் நேற்று தெரிவித்திருந்தார்.