Home One Line P1 அரசியல் நியமனங்கள்: மொகிதின் யாசினுக்கு எதிராக காவல் துறையில் புகார்!

அரசியல் நியமனங்கள்: மொகிதின் யாசினுக்கு எதிராக காவல் துறையில் புகார்!

726
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சில தலைவர்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் (ஜிஎல்சி) பதவிகளை வழங்குவதன் மூலம் அரசியல் இலஞ்சத்திற்கு வழிவகுத்ததாகக் கூறி பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக பிகேஆர் இளைஞர் காவல் துறையில் புகார் அறிக்கை அளிப்பர்.

அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா நேற்று எழுதிய கடிதத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து காவல் துறையில் புகார் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய இளைஞர் அணி செயலாளர் சுவா வீ கியாட் தெரிவித்தார்.

“அந்த அறிக்கையில் துங்கு ரசாலி, பிரதமர் அவருக்கு ஆதரவாக ஜிஎல்சி பதவியை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, ரவாங் சட்டமன்ற உறுப்பினர், பிகேஆர் இளைஞர் பிரிவு நாளை காலை 10 மணிக்கு டாங் வாங்கி காவல் தலைமையகத்தில் மொகிதினுக்கு எதிராக காவல் துறையில் புகார் அறிக்கை அளிக்கும் என்று கூறினார்.

அக்கடிதத்தில், ரசாலி, மொகிதின் தமக்கு பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியை வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மொகிதின் யாசின் தனக்கு அந்த பதவியை வழங்க முன் வந்தாலும் அதனைத் தான் நிராகரித்ததாக அவர் குறிப்பிட்டார். வழக்கமாக முன்னாள் பிரதமர்களுக்கு பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவி பாரம்பரியமாக வழங்கப்பட்டு வருகிறது.

“நான் ஏன் அந்தப் பதவியை நிராகரித்தேன் என்றால், மலேசிய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு இலாபம் தரும் வகையில் எந்த ஒரு பதவியை வகித்தாலும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதியை இழந்தவராக கருதப்படுவார். இந்த சட்டத்தின் காரணமாகவே நான் அந்தப் பதவியை நிராகரித்தேன்” என துங்கு ரசாலி சுட்டிக் காட்டியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட இந்த சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் ஆதாய இலஞ்சமாகப் பதவிகளை பெற்றுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தை ஆதரிப்பதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

இத்தகைய அரசியல் இலஞ்சம் மலேசிய நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை கடுமையாக சீர்குலைத்து உள்ளது என்று குறிப்பிட்ட துங்கு ரசாலி ஹம்சா இத்தகைய நடைமுறை நாட்டின் ஜனநாயக அமைப்புகளில் சத்தமின்றி உள்ளே நுழைந்து இருப்பது தனக்கு கவலை அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

தற்போது ஆட்சியில் இருக்கும் தேசியக் கூட்டணி பிப்ரவரி மாதத்தில் ஆட்சிக்கு வந்ததும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு அரசியல் நியமனங்கள் பிரதமரால் செய்யப்பட்டன. அவை மக்கள் மத்தியில் கடுமையான குறைகூறல்களுக்கு இலக்காகின.

மிகக்குறுகிய பெரும்பான்மையைக் கொண்டிருந்த மொகிதின் யாசின் தனது ஆதரவை பலப்படுத்திக் கொள்ள இத்தகைய அரசியல் நியமனங்களை வழங்கினார் என்றும் துங்கு ரசாலி ஹம்சா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.