Home One Line P1 “பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியை ஏன் நிராகரித்தேன்?” – துங்கு ரசாலி விளக்கம்

“பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியை ஏன் நிராகரித்தேன்?” – துங்கு ரசாலி விளக்கம்

665
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் ஹருணிடம் தான் சமர்ப்பித்திருக்கும் கடிதத்தில் துங்கு ரசாலி ஹம்சா பிரதமர் மொகிதின் யாசின் தனக்கு வழங்க முன்வந்த பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியை நிராகரித்ததற்கான காரணங்களை விளக்கியிருக்கிறார்.

பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு வழிவிட வேண்டுமென துங்கு ரசாலி ஹம்சா அசார் ஹருணை செப்டம்பர் 25 தேதியிட்ட அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில் தனது கடிதத்தில் தனக்கு வழங்கப்பட்ட பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியையும் நிராகரித்ததாக குறிப்பிட்டிருக்கின்றார்

#TamilSchoolmychoice

பிரதமர் மொகிதின் யாசின் தனக்கு அந்த பதவியை வழங்க முன் வந்தாலும் அதனைத் தான் நிராகரித்ததாக அவர் குறிப்பிட்டார். வழக்கமாக முன்னாள் பிரதமர்களுக்கு பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவி பாரம்பரியமாக வழங்கப்பட்டு வருகிறது.

“நான் ஏன் அந்தப் பதவியை நிராகரித்தேன் என்றால், மலேசிய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு இலாபம் தரும் வகையில் எந்த ஒரு பதவியை வகித்தாலும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதியை இழந்தவராக கருதப்படுவார். இந்த சட்டத்தின் காரணமாகவே நான் அந்தப் பதவியை நிராகரித்தேன்” என துங்கு ரசாலி சுட்டிக் காட்டியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட இந்த சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் ஆதாய இலஞ்சமாகப் பதவிகளை பெற்றுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தை ஆதரிப்பதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

இத்தகைய அரசியல் இலஞ்சம் மலேசிய நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை கடுமையாக சீர்குலைத்து உள்ளது என்று குறிப்பிட்ட துங்கு ரசாலி ஹம்சா இத்தகைய நடைமுறை நாட்டின் ஜனநாயக அமைப்புகளில் சத்தமின்றி உள்ளே நுழைந்து இருப்பது தனக்கு கவலை அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

தற்போது ஆட்சியில் இருக்கும் தேசியக் கூட்டணி பிப்ரவரி மாதத்தில் ஆட்சிக்கு வந்ததும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு அரசியல் நியமனங்கள் பிரதமரால் செய்யப்பட்டன. அவை மக்கள் மத்தியில் கடுமையான குறைகூறல்களுக்கு இலக்காகின.

மிகக்குறுகிய பெரும்பான்மையைக் கொண்டிருந்த மொகிதின் யாசின் தனது ஆதரவை பலப்படுத்திக் கொள்ள இத்தகைய அரசியல் நியமனங்களை வழங்கினார் என்றும் துங்கு ரசாலி ஹம்சா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் சாத்தியமா?

பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் முன்னாள் பிரதமரும் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான துன் மகாதீர் முகமட் அவர்களால் கடந்த மே மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது மே பதினெட்டாம் தேதியன்று, ஒரே ஒருநாள் மட்டும் நாடாளுமன்ற அவை கூடியது. மாமன்னர் உரையோடு அந்தக் கூட்டம் நிறைவுக்கு வந்தது.

அதைத்தொடர்ந்து ஜூலை மாதத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் பிரதமர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவில்லை.

இதைத்தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அனுமதிக்கும்படி துங்கு ரசாலி நாடாளுமன்ற அவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தொடர் தொடங்கவிருக்கிறது. அந்த நாடாளுமன்றத் தொடரில் 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

துங்கு ரசாலி கையெழுத்திட்ட கடிதம் சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்தக் கடிதத்திற்கு அசார் அசிசான் வழங்கியிருக்கும் செப்டம்பர் 29 தேதியிட்ட பதில் கடிதத்தின் விவரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.