Home நாடு நெங்கிரி இடைத் தேர்தல் : துங்கு ரசாலி – அம்னோவின் செல்வாக்கை நிரூபிக்குமா?

நெங்கிரி இடைத் தேர்தல் : துங்கு ரசாலி – அம்னோவின் செல்வாக்கை நிரூபிக்குமா?

282
0
SHARE
Ad
நெங்கிரி தொகுதியில் இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் சாஹிட் ஹாமிடி…

குவா மூசாங் : நெங்கிரி சட்டமன்றத்திற்கான வாக்களிப்பு நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) நடைபெறவிருக்கும் நிலையில் அந்தத் தொகுதியில் இறுதிக் கட்டப் பிரச்சாரங்களில் அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ சாஹிட் ஹாமிடி நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) தனது குழுவினருடன் ஈடுபட்டார். அவருடன் பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோனும் கலந்து கொண்டார்.

இன்னொரு கோணத்தில் நெங்கிரி தொகுதி அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இங்கு வெல்வதன் மூலம் கிளந்தான் மாநிலத்திலும் தங்களுக்கு இன்னும் செல்வாக்குண்டு என்பதை அம்னோ நிரூபிக்குமா? என்பதுதான் அது! அவ்வாறு வெற்றி பெற்றால் அம்னோவின் செல்வாக்கு மட்டுமின்றி அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடியின் தலைமைத்துவம் மீதான செல்வாக்கும் அதிகரிக்கும்.

நேற்றைய பிரச்சாரத்தில் பேசிய சாஹிட், நெங்கிரி சட்டமன்ற வாக்காளர்கள் தேசியப் பிரச்சனைகள் குறித்து அக்கறை கொள்ளவில்லை என்றும் இதன் காரணமாக, தேசியப் பிரச்சனைகளைப் பேசும் பெரிக்காத்தான் நேஷனல் முன்னணியின் பிரச்சாரங்களில் மயங்கி விட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அதே வேளையில் அம்னோவின் மூத்த தலைவரும் நெங்கிரி தொகுதியின் இடைத் தேர்தலுக்கான தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவருமான துங்கு ரசாலி மீண்டும் தன் செல்வாக்கை குவா மூசாங் தொகுதியில் நிலைநாட்டுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. காரணம், துங்கு ரசாலி ஹம்சா நீண்ட காலமாகத் தற்காத்து வந்த குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் நெங்கிரி ஒன்றாகும். கடந்த 2022 பொதுத் தேர்தலில் துங்கு ரசாலி ஹம்சா பாஸ் வேட்பாளரிடம் குவா மூசாங் தொகுதியில் தோல்வியடைந்தார். 2023 சட்டமன்றத் தேர்தலில் நெங்கிரி தொகுதியிலும் அம்னோ-தேசிய முன்னணி தோல்வி கண்டது.

எனவே, நெங்கிரி தொகுதியை அம்னோ கைப்பற்றினால் துங்கு ரசாலியின் தனிப்பட்ட செல்வாக்கும் அந்த வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக அமையும்.

தேசிய முன்னணிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையில் நேரடிப் போட்டி இங்கு உருவெடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி நெங்கிரி சட்டமன்றத்திற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது.

கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் சார்பில் போட்டியிட்ட பெர்சாத்து வேட்பாளர் முகமட் அசிசி அபு நைம் 810 வாக்குகளில்தான் இங்கு வெற்றி பெற்றார். அண்மையில் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் பெர்சாத்து கட்சியில் இருந்து ஜூன் 13-ஆம்  தேதி நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரின் சட்டமன்றத் தொகுதியும் காலியானதாக கிளந்தான் சட்டமன்ற அவைத் தலைவர் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா கடந்த ஜூன் 19-ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

பெர்சாத்து கட்சியின் சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் போட்டியிடுகிறார். இவர் குவா மூசாங் தொகுதி பாஸ் கட்சியின் முன்னாள் இளைஞர் பகுதித் துணைத் தலைவராவார். அரச மலேசிய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த இடைத் தேர்தலில் அவர் பாஸ் சின்னத்தில் போட்டியிடுகிறார். அந்த முடிவை பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முஹிடின் யாசின் தற்காத்துள்ளார்.

இங்கு போட்டியிடும் அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானியும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் முகமட் அசிசி பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேசிய முன்னணியின் அப்துல் அசிஸ் யூசோப்பைத் தோற்கடித்தார். இதற்கிடையில் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலை சட்டரீதியாக நிறுத்தும் நீதிமன்ற வழக்குகளில் முகமட் அசிசி தோல்வியடைந்தார்.

2004 தொடங்கி இதுவரை நெங்கிரியில் நடைபெற்ற 5 தேர்தல்களில் 4 தேர்தல்களில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. 2023-இல் மட்டுமே பாஸ்-பெர்சாத்து வேட்பாளர் முகமட் அசிசி வெற்றி பெற்றார்.

15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் 9-வது இடைத் தேர்தல் இதுவாகும்.