Home One Line P1 ஒன்றாகப் போராடிய பிறகு, பிரிந்து செல்வது கடினம்- அன்வாருக்கு ஆதரவாக முகமட் சாபு

ஒன்றாகப் போராடிய பிறகு, பிரிந்து செல்வது கடினம்- அன்வாருக்கு ஆதரவாக முகமட் சாபு

673
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வரவு செலவு திட்டம் தொடர்பாக  சூழ்ச்சி செய்ததற்காக பிகேஆர் தலைவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அன்வார் இப்ராகிம் உடனான தனது உறவைப் பாதுகாப்பதாக அமானா தலைவர் முகமட் சாபு கூறினார்.

ஒரே காரணத்திற்காக ஒன்றாகப் போராடிய பிறகு, பிரிந்து செல்வது கடினம் என்று முகமட் சாபு கூறினார்.

“நம்பிக்கைக் கூட்டணியில், குறிப்பாக அன்வாருடனான எங்கள் உறவு நீண்டது. 20 ஆண்டுகளாக, எங்கள் போராட்டத்தில் நாங்கள் ஒன்றாக சவால்களை எதிர்கொண்டோம். இது பாதுகாக்கப்பட வேண்டும். அனைவருக்கும் பலவீனங்கள் உள்ளன. ஆனால், அவை சரி செய்யப்படலாம். இதைவிட முக்கியமானது ஒற்றுமையாக இருப்பது. அதே நேரத்தில், நாங்கள் எப்போதும் புதிய நண்பர்களை உருவாக்குவதற்கான வழிகளைக் கண்டுபிடித்து வருகிறோம். குறைவான எதிரிகளைக் கொண்டிருக்கிறோம். இதுதான் நாங்கள் எடுக்கும் அணுகுமுறை,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

வியாழக்கிழமை நடந்து முடிந்த வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது, எண்ணிக்கை வாக்கெடுப்பிற்கு அன்வார் இப்ராகிம் முடியாது என்று கூறி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்தது பரவலாக பலரது விமர்சனத்திற்கு உட்பட்டது. பொது மக்கள், கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் அன்வாரை குறைக் கூறினர். ஜசெக இளைஞர் பிரிவு, அன்வார் இப்ராகிம் பதவி விலக வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இவ்வாறாக, கூட்டணிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், முகமட் சாபு அவருக்கு ஆதரவைக் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே,  வரவு செலவு வாக்கெடுப்பில் குழு மட்டத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க எதிர்க்கட்சிக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதாக நேற்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“வரவிருக்கும் வாரங்களில் குழு மட்டத்தில் எண்ணிக்கை வாக்கெடுப்பு உட்பட உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த இன்னும் வாய்ப்புகள் உள்ளன,” என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

வியாழக்கிழமை, தேசிய கூட்டணியின் வரவு செலவு திட்டம் குரல் வாக்களிப்பின் வழி நிறைவேற்றப்பட்டது.

எண்ணிக்கை வாக்கெடுப்புக்கு 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. போக்கோக் செனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் எண்ணிக்கை வாக்கெடுப்புக்கு முயன்றபோது, ​​13 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவாக நின்றனர்.

இது எதிர்க்கட்சிகளுக்கு, குறிப்பாக நம்பிக்கை கூட்டணி, தங்கள் ஆதரவாளர்களால் சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனத்தைப் பெற்றது.