Home One Line P1 “பேராக்கில் அம்னோ புதிய கூட்டணி அமைக்கலாம்” – சுல்தானைச் சந்தித்த பின்னர் சாஹிட்!

“பேராக்கில் அம்னோ புதிய கூட்டணி அமைக்கலாம்” – சுல்தானைச் சந்தித்த பின்னர் சாஹிட்!

689
0
SHARE
Ad

ஈப்போ: பேராக் மாநில மந்திரி பெசார் நியமன விவகாரத்தை விவாதிப்பதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6) காலையில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பேராக் சுல்தானைச் சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த சாஹிட், பேராக்கில் அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் அம்னோ புதிய கூட்டணியை உருவாக்கலாம் எனக் கோடி காட்டினார்.

புதிய மந்திரிபெசார் பதவிக்கான உத்தேச வேட்பாளர்களை சுல்தானிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் சுல்தான் மந்திரி பெசாரை முடிவு செய்வார் என்றும் சாஹிட் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

3 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாஸ் புதிய அரசாங்கத்தில் இடம் பெறப் போவதில்லை என அறிவித்து விட்டது. பெர்சாத்து கட்சி 5 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது.

எனவே, 25 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே அம்னோ கொண்டிருப்பதால் ஆட்சி அமைக்க மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அந்தக் கட்சிக்குத் தேவைப்படுகிறது.

59 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பேராக்கில் ஆட்சி அமைக்க குறைந்த பட்சம் 30 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

எனவே, பெர்சாத்துவும், பாஸ் கட்சியும் அம்னோவுக்கு ஆதரவு தர முன்வராவிட்டால் எஞ்சியிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு அம்னோ மாநில அரசாங்கத்தை அமைக்கும் என்பதை சாஹிட்டின் கூற்று உறுதிப்படுத்துகிறது.

எனினும் பழைய அமைப்பிலேயே – அதாவது தேசியக் கூட்டணி அடிப்படையிலேயே – அம்னோ தனது மந்திரி பெசாரைக் கொண்டு ஆட்சி அமைக்க விரும்புகிறது என சாஹிட் கூறினார். அப்படி இயலாத பட்சத்தில் புதிய கூட்டணியை உருவாக்கும் சாத்தியத்தையும் அவர் மறுக்கவில்லை.

பெரும்பான்மையை இழந்த அசுமு

பேராக் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு, நேற்று சனிக்கிழமை பிற்பகலில் தனது அதிகாரபூர்வ பதவி விலகல் கடிதத்தைச் சுல்தானிடம் சமர்ப்பித்தார்.

அதைத் தொடர்ந்து அவரது ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் முறையே தங்களின் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்தனர். பேராக் சுல்தான் சார்பாகப் பேசிய அரண்மனைக் காப்பாளர் சுல்தான் பதவி விலகும் அசுமுவுக்கும் அவரது ஆட்சிக் குழுவினருக்கும் அவர்கள் ஆற்றிய சேவைகளுக்காக சுல்தான் நன்றி தெரிவித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.

சுல்தானுடன் சாஹிட் சந்திப்பு

இன்று காலை பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவைச் சந்திக்க, சாஹிட் ஹாமிடி ஈப்போவில் உள்ள இஸ்தானா கிந்தா வந்தடைந்தார்.

நேற்று இரவு பேராக் அம்னோ சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியது. எனினும் அடுத்த மந்திரி பெசாராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்தும் யாரும் கருத்து சொல்ல மறுத்து விட்டனர்.

பேராக் அம்னோ தலைவர் சரானி முகமட், முன்னாள் மந்திரி பெசார் சாம்ரி காதிர், ருங்குப் சட்டமன்ற உறுப்பினர் ஷாருல் சாமான் ஆகிய மூவரும் அடுத்த மந்திரி பெசாராக நியமிக்கப்பட பரிசீலனையில் இருக்கின்றனர் என ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கிடையில், பேராக் (பக்காத்தான் ஹரப்பான்) நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்களையும், பேராக் அம்னோ தலைவர் சரானியையும் சுல்தான் தனித் தனியாக சந்தித்திருக்கிறார்.

அம்னோ அடுத்த ஆட்சியை அமைக்க முடியுமா?

அடுத்த மந்திரி பெசாராக அம்னோவைச் சேர்ந்தவர் வருவார் என்பது உறுதியாகியிருக்கிறது.

நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அம்னோ அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 4) மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் அகமட் பைசால் தோல்வியுற்றார். அவருக்கு எதிராக 48 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆதரவாக மூன்று பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பத்து பேர் வாக்களித்தனர்.