Home One Line P1 பேராக்: அம்னோவின் சரணி முகமட் மந்திரி பெசாராக தொடர ஆதரவு!

பேராக்: அம்னோவின் சரணி முகமட் மந்திரி பெசாராக தொடர ஆதரவு!

398
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பேராக் அம்னோ தொடர்பு குழுத் தலைவர் சரணி முகமட்டை பேராக் மந்திரி பெசாராக ஆதரிப்பதாக மொத்தம் 26 பேராக் சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அனைத்து 25 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்தும், பெர்சாத்துவிலிருந்து ஒருவரிடமிருந்தும் இந்த ஆதரவு பெறப்பட்டுள்ளதாக சினார் ஹாரியானுக்கு வட்டாரம் தெரிவித்ததாகக் கூறியது.

மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான ஓர் எளிய பெரும்பான்மைக்கு 30 இடங்கள் தேவை.

#TamilSchoolmychoice

பெர்சாத்துவின் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய பேராக் அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் அது ஈடுபடாது என்று பாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

“முன்னாள் மந்திரி பெசார் உட்பட பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தால், மாநில நிர்வாகத்தை மிட்க முடியும். ஆனால், சுல்தான் நஸ்ரின் ஒரு நிலையான அரசாங்கத்தை எதிர்பார்க்கிறார். எனவே, பாஸ் தனது முடிவை விரைவுபடுத்த வேண்டும்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பைசால் மாநிலத்தின் மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் பேராக் அரசியல் நெருக்கடி தொடங்கியது.