Home One Line P1 தேசியக் கூட்டணி உறவை முறித்துக் கொள்ள அம்னோ பேராளர்கள் தீர்மானம்

தேசியக் கூட்டணி உறவை முறித்துக் கொள்ள அம்னோ பேராளர்கள் தீர்மானம்

538
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற அம்னோ தேசியப் பொதுப் பேரவையின் முடிவின்போது அம்னோ பேராளர்கள் ஆளும் தேசியக் கூட்டணியோடு உறவை முறித்துக் கொண்டு வெளியேறும் தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர்.

எனினும் எப்போது பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்பது குறித்து அம்னோ உச்சமன்றம் நிர்ணயம் செய்யும்.

உடனடியாகப் பொதுத் தேர்தல்களை நடத்த வேண்டும் இல்லாவிட்டால் அம்னோ தேசியக் கூட்டணி அரசாங்கத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுக்கும் என அம்னோ தலைவர் சாஹிட் இப்ராகிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர் இந்த விவகாரம் குறித்துக் கருத்துரைத்த அம்னோவின் மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தேசியக் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்துவிட்டதால் உடனடியாக அம்னோ அமைச்சர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

இன்று காலையில் அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் இப்ராகிம், அம்னோ தேசிய முன்னணி கூட்டணியிலேயே இணைந்திருக்கும் என அறிவித்திருந்தார்.

அம்னோவில் எதிரிகள் உள்ளேயே இருக்கிறார்கள் என்று சாடிய சாஹிட் “ஒட்டுண்ணிகள்” போல் இவர்கள் கூடவே இருந்து கொண்டு அம்னோவுக்கு எதிராகவும், பெர்சாத்து கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் தனதுரையில் தெரிவித்தார்.

அம்னோவை உடைப்பதற்கும், அதன் ஆதரவை விலை கொடுத்து வாங்குவதற்கும் சில தரப்புகள் முயற்சி செய்தன என்றும் எனினும் தான் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை என்றும் சாஹிட் மேலும் தெரிவித்திருக்கிறார்.

பெர்சாத்துவுடனான உறவுகளை முறிக்கும் விதமாக இன்றைய அம்னோ பொதுப் பேரவையில் முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தொடங்கிய அம்னோ பொதுப்பேரவையில் கலந்து கொண்ட அம்னோ பேராளர்கள் பெர்சாத்து கட்சியைத் கடுமையாகச் சாடி கருத்துகளை வெளியிட்டனர்.

நேற்று சனிக்கிழமை அம்னோ இளைஞர், மகளிர், புத்ரா பிரிவுகளின் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான், பிரதமர் பதவி அம்னோவுக்குச் சொந்தமானது என்றும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை சிறப்பாக வழிநடத்திய திறனும் அனுபவமும் அம்னோவுக்கு உண்டு என்றும் கூறினார்.

இன்றைய அம்னோ பொதுப் பேரவையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் மற்ற தேசிய முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டனர்.