இந்தக் கடிதம் போலியானது என்றும் இதற்கும் தனக்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்றும் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் தரப்பில் காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவரின் பத்திரிகை செயலாளர் ஹாபிஸ் அரிபின் இந்தப் புகாரை தலைநகர் டாங் வாங்கி காவல் நிலையத்தில் நேற்று பதிவு செய்தார்.
இந்தக் கடிதத்தின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்றும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஹாபிஸ் தனது புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார். மக்களைக் குழப்புவதற்காகவும், ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்னின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வண்ணமும் இந்தக் கடிதம் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து தனது முகநூலில் பதிவிட்ட ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் இதை விசாரிக்கும் நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விட்டு விடுவதாகத் தெரிவித்தார்.
அம்னோவில் பிளவு
அம்னோவில் பிளவுகளுக்கான அறிகுறிகள் தெளிவாகத் தென்படத் தொடங்கியிருக்கின்றன.
அந்த சத்திப்பிரமாண ஆவணங்களில் கையெழுத்திட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தானும் ஒருவர் என்பதையும் நஸ்ரி அசிஸ் உறுதிப்படுத்தினார்.
அன்வார் இப்ராகிமை பிரதமராக்க அனைத்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிப்பதாக மாமன்னரிடம் சாஹிட் ஹாமிடி கடிதம் ஒன்றை வழங்கியதால் ஹாமிடி மீது தாங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக நஸ்ரி அசிஸ் தெரிவித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசின் அரசாங்கத்தைக் கவிழ்க்க நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏதும் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டால் அந்தத் தீர்மானத்தை தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் நஸ்ரி அசிஸ் கூறியிருக்கிறார்.
சாஹிட் ஹாமிடி மறுத்து கிண்டல்
அம்னோவில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் அரசியல் நகர்வுகள், அறிக்கைகளை வைத்துப் பார்க்கும் அந்தக் கட்சி வரலாறு காணாத பிளவு ஒன்றை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கு முன் 1987-ஆம் ஆண்டில் மகாதீர்-துங்கு ரசாலி இடையிலான தலைமைத்துவப் போட்டியைத் தொடர்ந்து அம்னோ இரண்டாகப் பிளவுபட்டது.