Home நாடு கொவிட்-19: ஒருநாளில் 107 -ஆக மரணங்கள் அதிகரிப்பு – புதிய தொற்றுகள் 6,437

கொவிட்-19: ஒருநாளில் 107 -ஆக மரணங்கள் அதிகரிப்பு – புதிய தொற்றுகள் 6,437

1120
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை ஜூன் 29 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 107 மரணங்கள் பதிவாகியிருக்கின்றன. நேற்றைய எண்ணிக்கையான 57-உடன் ஒப்பிடும்போது இது ஏறத்தாழ இரண்டு மடங்கு உயர்வாகும்.

கொவிட்-19 தொற்றின் தாக்கத்தினால் மரண அபாயம் அதிகரித்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலத்திலும் நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையும், மரண எண்ணிகையும் தொடர்ந்து கணிசமான அளவில் நீடித்துக் கொண்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இன்றைய மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைக் கடந்து 5,108 ஆக உயர்ந்தது.

மரணமடைந்தவர்களில் ஆண்கள் 75 பேர், பெண்கள் 32 பேர். மரணமடைந்தவர்களில் 14 பேர் மரணத்துக்குப் பின்னரே மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

அமுலில் இருந்து வந்த முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்ந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மொகிதின் யாசின் 150 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிதி உதவித் திட்டங்களை நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.

இதற்கிடையில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) வரையிலான மொத்த ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 6,437 ஆக அதிகரித்தது.

நேற்றைய எண்ணிக்கையான 5,218 என்பதை விட இன்று ஆயிரத்துக்கும் கூடுதலான தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 745,703 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் பதிவான 6,437 தொற்று சம்பவங்களில் 6,423 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 14 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 5,298 -ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 677,751 -ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 62,844 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 905 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 455 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் சிலாங்கூர் 2,299 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

அதற்கு அடுத்த நிலையில் 1,361 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை 700 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பதிவு செய்திருக்கிறது.

சரவாக் 242 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.