Home நாடு நாடாளுமன்றத்தைக் கூட்ட இரு அவைகளின் தலைவர்களும் பிரதமருக்குக் கோரிக்கை

நாடாளுமன்றத்தைக் கூட்ட இரு அவைகளின் தலைவர்களும் பிரதமருக்குக் கோரிக்கை

651
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் அசாரும், நாடாளுமன்ற மேலவையின் தலைவர் ராய்ஸ் யாத்திமும் (படம்) நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) மாமன்னரைச் சந்தித்த பின்னர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.

அந்த அறிக்கையில் அவர்கள் இருவரும் மாமன்னரின் உத்தரவுக்கு ஏற்ப நாடாளுமன்றத்தை விரைவில் கூட்ட உத்தரவிடுமாறு பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாமன்னர் கொடுத்த உத்தரவை அவைத் தலைவர்கள் இருவரும் கருத்தில் எடுத்துக் கொண்டு அந்த உத்தரவின் விவரங்களை பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து நடப்பிலுள்ள சட்டதிட்டங்களுக்கு ஏற்ப எதிர் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என பிரதமரை இரு அவைத் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர்.

#TamilSchoolmychoice

நேற்று மாமன்னர் வெளியிட்ட அறிக்கையில் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் எப்போது கூட்டப்பட வேண்டும் என்ற முடிவை அமைச்சரவை இன்றையக் கூட்டத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், பிரதமரின் உடல்நிலை – அவருக்கு வயிற்றுப் போக்கு என்ற காரணம் காட்டி இன்றைய அமைச்சரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் எப்போது நாடாளுமன்றம் கூடும் என்ற ஐயப்பாடு தொடர்ந்து நிலவுகிறது.

அவைத் தலைவர்களுடன் மாமன்னரின் சந்திப்பு

மாமன்னர் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் ஹாருணையும், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்திமையும் அரண்மனையில் சந்தித்துப் பேசினார்.

அவர்களோடு நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான், டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னோன் ஆகியோரும் நாடாளுமன்ற மேலவையின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அலி முகமட்டும் இந்த சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

அந்த சந்திப்பைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என மாமன்னர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மாமன்னர் சார்பில் அந்த அறிக்கையை அரண்மனைக் காப்பாளர் அகமட் பாடில் ஷாம்சுடின் வெளியிட்டார்.

அரசியல் அமைப்பு சட்டம் 150 (3) இன்படி அவசர கால சட்டம் அமுலாக்கப்பட்டதும் அது தொடர்பான சட்டங்களும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் மாமன்னரின் அறிக்கை தெரிவித்தது.

தேவைப்பட்டால் அவசரகால சட்டங்களை நீக்குவதற்கும் நாடாளுமன்றம் முடிவு செய்யலாம். அதே வேளையில் நாடாளுமன்றத் தேர்வுக் குழுக்கள் தொடர்ந்து சந்திப்புக் கூட்டங்கள் நடத்தி அத்தியாவசியமான முடிவுகளைச் செய்ய வேண்டும் என்றும் மாமன்னர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் மாமன்னரைச் சந்திக்கச் செல்லும் முன் பத்திரிகையாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னோன் நாடாளுமன்றத்தை எப்போது கூட்டுவது என்பது குறித்து பிரதமர் மட்டுமே மாமன்னருக்கு ஆலோசனை கூற முடியும் எனத் தெரிவித்தார்.

சட்ட சிக்கல் எழலாம்

நாளையோடு நாடாளுமன்றம் கூடி ஆறுமாதங்கள் முடிந்துவிட்டன என்பதால் நாடாளுமன்றத் தவணை இயல்பாகவே முடிவுக்கு வந்து விட்டது – காலாவாதியாகிவிட்டது என்ற சட்ட சிக்கலும் சில வழக்கறிஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

இதற்கிடையில், சட்டத் துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் (படம்) விடுத்த அறிக்கை ஒன்றில் நாடாளுமன்றம் எப்போது கூட்டப்பட வேண்டும் என்பதை அமைச்சரவை மட்டுமே நிர்ணயிக்க முடியும் எனக் கூறியிருந்தார்.

ஜனவரி மாதத்தில் கொவிட்-19 தொடர்பாக அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்போதிருந்து நாடாளுமன்றம் இன்னும் கூட்டப்படவில்லை.

இன்றைய அமைச்சரவைக் கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால் இனி மாமன்னரின் அறைகூவலுக்கு ஏற்ப எப்போது நாடாளுமன்றம் உடனடியாகக் கூடும் என்பது குறித்த அறிகுறிகள் தென்படவில்லை.