Home நாடு அம்னோ உச்சமன்றம் கூடுகிறது : அரசாங்கத்திலிருந்து விலகுமா? நீடிக்குமா?

அம்னோ உச்சமன்றம் கூடுகிறது : அரசாங்கத்திலிருந்து விலகுமா? நீடிக்குமா?

906
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (ஜூலை 7) இரவு கூடவிருக்கும் அம்னோ உச்சமன்றம் மிக முக்கியமான முடிவை எடுக்கவிருக்கிறது. ஆளும் தேசியக் கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகுவதா அல்லது  தொடர்ந்து நீடிப்பதா என்ற முடிவை அம்னோ உச்சமன்றம் எடுக்கவிருக்கிறது.

இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 5) அம்னோ தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக் கூட்டத்தின் போது தான் அன்வாருக்கு ஆதரவாக சத்தியப் பிரமாணக் கடிதம் வழங்கியிருப்பதை அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும், அன்வாருடன் தொலைபேசியில் பேசியது நான்தான் என உறுதிப்படுத்தினார் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி, தற்காப்பு அமைச்சில் கூட்டிய அம்னோ தலைவர்களின் கூட்டத்தில் சாஹிட் ஹாமிடி அன்வாருடனான தனது தொடர்பை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து இன்றைய அம்னோ கூட்டம் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பரபரப்பான சந்திப்புகள்

மிக முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ள அம்னோவின் உயர்மட்டத் தலைவர்கள் கடந்த சில நாட்களாக சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக திங்கட்கிழமை (ஜூலை 5) இரவு 9.30 மணி தொடங்கி இரவு 11.30 வரையில் அம்னோவின் உயர்மட்டத் தலைவர்கள் சந்திப்பு தலைநகர் தற்காப்பு அமைச்சில் நடைபெற்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டம் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரியால் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், நடப்பு அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான நடப்பு தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு ஒப்புக் கொள்ளாத அம்னோ தலைவர்கள், அமைச்சர்கள், பெரும்பாலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அம்னோவில் தற்போது பெரிய அளவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. தேசியக் கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தருவதா அல்லது அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதா என்பதுதான் அம்னோவின் இக்கட்டான நிலை.

இதில் அம்னோ தலைவர்கள் 2 விதமான நிலைப்பாட்டைக் கொண்டு பிளவுபட்டு நிற்கின்றார்கள்.

இந்தப் பிரச்சனையில் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி இரண்டு தரப்புக்கும் இடையில் சமரசம் செய்யும் பேச்சாளராக இருந்து செயல்பட்டு வருகிறார்.

ஜூலை 5-ஆம் தேதி தற்காப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டம் முடிவடைந்த பின்னர்  அம்னோ தலைவர்கள் கொண்ட மற்றொரு குழு புத்ரா உலக வாணிப மையத்தில் உள்ள அம்னோ தலைமையகத்திற்கு சென்று அங்கு அதிகாரபூர்வமற்ற கூட்டம் ஒன்றை நடத்தினர்.

அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

தற்போது அமைச்சர்களாக இருக்கும் இருவர், மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அம்னோவின் மூத்த தலைவர்களான துங்கு ரசாலி ஹம்சா, தாஜூடின் போன்றவர்கள் தேசியக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள்.

தற்போது இருதரப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் ஜூலை 26 முதல் நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அம்னோ- பெர்சாத்து இடையிலான பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த சூழலில்தான் முக்கிய முடிவை எடுக்கும் நோக்கில் அம்னோ உச்சமன்றம் இன்று கூடுகிறது.