Home நாடு இந்திரா காந்தி வழக்கைத் தள்ளுபடி செய்ய அரசாங்கத்தின் மனு – நீதிமன்றம் நிராகரித்தது

இந்திரா காந்தி வழக்கைத் தள்ளுபடி செய்ய அரசாங்கத்தின் மனு – நீதிமன்றம் நிராகரித்தது

582
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முஸ்லீம் மதத்துக்கு மாறிய தனது கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லாவைக் கைது செய்யாதது, தனது மகள் பிரசன்னா டிக்சாவை நீதிமன்றம் உத்தரவிட்டும் இத்தனை ஆண்டுகள் கண்டுபிடிக்க முடியாதது ஆகிய காரணங்களுக்காக பாலர் பள்ளி ஆசிரியையான இந்திரா காந்தி அரசாங்கத்தின் மீதும், காவல் துறையின் மீதும் வழக்கொன்றைத் தொடுத்திருக்கிறார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென அரசாங்கத் தரப்பிலும், காவல் துறை தரப்பிலும் மனு ஒன்று செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாதென தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தெரிவித்தார் என இந்திரா காந்தியின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கை இந்திரா காந்தி கடந்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.

ஐஜிபி-க்கள் மாறினாலும் – யாராலும் கண்டுபிடிக்க முடியாத இந்திரா காந்தி மகள்

ஓரிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு புதிய காவல் துறைத் தலைவர் நியமனம் பெறுகிறார் – பழையவர் பதவி விலகிச் செல்கிறார். ஆனால் ஆண்டுகள் கடந்து கொண்டிருந்தாலும் சர்ச்சைக்குரிய இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்சாவை எந்த ஐஜிபியாலும் கண்டு பிடிக்க முடியாததுதான் ஆச்சரியமாக இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

மே 3-ஆம் தேதியோடு பதவி விலகிய ஐஜிபி அப்துல் ஹாமிட் பாடோரும் இந்திரா காந்தியின் மகளைக் கண்டு பிடிக்க முடியாததற்கு ஒரு புதிய விளக்கத்தைத் தந்தார்.

அதாவது சில அரசு சாரா இயக்கங்கள் தலையிட்டதால்தான் தன்னால் பிரசன்னா டிக்சாவைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது என விளக்கம் தந்திருக்கிறார் ஹாமிட் பாடோர்.

காவல் துறை விசாரணையில் தலையிட வேண்டாம் என இந்திரா காந்திக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் ஹாமிட் பாடோர் கூறியிருக்கிறார்.

ஹாமிட் பாடோர் விளக்கத்துக்கு இங்காட் எதிர்ப்பு

ஹாமிட் பாடோர் தந்திருக்கும் விளக்கத்திற்கு அப்போது கண்டனம் தெரிவித்தது இங்காட் என்ற அரசு சாரா இயக்கம்.

தனது தோல்விகளுக்காக ஹாமிட் பாடோர் மற்றவர்களைக் குறை சொல்லக் கூடாது என இங்காட் தலைவர் அருண் துரைசாமி (படம்) பதிலடி கொடுத்திருந்தார்.

இங்காட் என்பது (The Indira Gandhi Action Team – Ingat) இந்திரா காந்தி நடவடிக்கைக் குழு என்ற பெயரில் அவரின் மகளைக் கண்டுபிடித்து மீட்க அமைக்கப்பட்ட அரசு சாரா இயக்கமாகும்.