அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென அரசாங்கத் தரப்பிலும், காவல் துறை தரப்பிலும் மனு ஒன்று செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாதென தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தெரிவித்தார் என இந்திரா காந்தியின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் குறிப்பிட்டார்.
இந்த வழக்கை இந்திரா காந்தி கடந்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.
ஐஜிபி-க்கள் மாறினாலும் – யாராலும் கண்டுபிடிக்க முடியாத இந்திரா காந்தி மகள்
ஓரிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு புதிய காவல் துறைத் தலைவர் நியமனம் பெறுகிறார் – பழையவர் பதவி விலகிச் செல்கிறார். ஆனால் ஆண்டுகள் கடந்து கொண்டிருந்தாலும் சர்ச்சைக்குரிய இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்சாவை எந்த ஐஜிபியாலும் கண்டு பிடிக்க முடியாததுதான் ஆச்சரியமாக இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
மே 3-ஆம் தேதியோடு பதவி விலகிய ஐஜிபி அப்துல் ஹாமிட் பாடோரும் இந்திரா காந்தியின் மகளைக் கண்டு பிடிக்க முடியாததற்கு ஒரு புதிய விளக்கத்தைத் தந்தார்.
காவல் துறை விசாரணையில் தலையிட வேண்டாம் என இந்திரா காந்திக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் ஹாமிட் பாடோர் கூறியிருக்கிறார்.
ஹாமிட் பாடோர் விளக்கத்துக்கு இங்காட் எதிர்ப்பு
ஹாமிட் பாடோர் தந்திருக்கும் விளக்கத்திற்கு அப்போது கண்டனம் தெரிவித்தது இங்காட் என்ற அரசு சாரா இயக்கம்.
இங்காட் என்பது (The Indira Gandhi Action Team – Ingat) இந்திரா காந்தி நடவடிக்கைக் குழு என்ற பெயரில் அவரின் மகளைக் கண்டுபிடித்து மீட்க அமைக்கப்பட்ட அரசு சாரா இயக்கமாகும்.