Home நாடு நாடாளுமன்றம் பிற்பகல் 5.15 மணி வரை மீண்டும் ஒத்தி வைப்பு – சிலருக்கு கொவிட் தொற்றாம்!

நாடாளுமன்றம் பிற்பகல் 5.15 மணி வரை மீண்டும் ஒத்தி வைப்பு – சிலருக்கு கொவிட் தொற்றாம்!

715
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 3.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 5.15 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவையின் துணைத் தலைவர் டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னோன் அறிவித்தார்.

பிற்பகல் 3.30 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது அவைத் தலைவர் பொறுப்பை ஏற்ற முகமட் ரஷிட் ஹாஸ்னோன், நாடாளுமன்ற பணியாளர்கள் இருவருக்கு கொவிட் தொற்று கண்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருப்பதாகவும் அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் மீது கொவிட் பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் அதற்கு ஏதுவாக மாலை 5.15 மணிவரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படுவதாகவும் ஹாஸ்னோன் அறிவித்து விட்டு நாடாளுமன்ற அவையிலிலிருந்து வெளியேறினார்.

மாமன்னர் அறிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளிகளினால் நாடாளுமன்றம் பிற்பகலில் தொடரும் என அறிவிக்கப்பட்டது. தக்கியூடின் ஹாசானும், சட்டத் துறை தலைவர் இட்ருஸ் ஹாருணும் தனக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு முரணாக நடந்து கொண்டனர் என்றும் என்னை அவமதித்து விட்டனர் என்றும் மாமன்னர் கடுமையான அறிக்கை ஒன்றை இன்று காலையில் விடுத்திருந்தார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறைகூவல் விடுத்தார்.

தொடர்ந்து ஏற்பட்ட அமளிகளினால் நாடாளுமன்றம் பிற்பகலில் தொடரும் என அறிவிக்கப்பட்டது. எனினும் பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்க வேண்டிய நாடாளுமன்றக் கூட்டம் ஒருமணி நேரம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றும் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கும் என்றும் அவைத் தலைவர் அசார் அசிசான் அறிவித்தார்.

தற்போது மீண்டும் மாலை 5.15 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.