புதிய பிரதமர் நியமனத்திற்காகக் காத்திருக்கும் சில பதவிகளில் முக்கியமானது தேசிய மின்சார வாரியத்தின் தலைவருக்கான பதவி!
தேசிய மின்சார வாரியத்தின் புதிய தலைவர் யார்?
தற்போது இதன் தலைவராக இருப்பவர் கெடாவின் பாடாங் தெராப் நாடாளுமன்ற உறுப்பினர் மாஹ்ட்சிர் காலிட். புதிய அமைச்சரவையில் விவசாயம், உணவுத் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் மகாட்சிர் காலிட்.
இதைத் தொடர்ந்து இவருக்குப் பதிலாக தேசிய மின்சார வாரியத்திற்கும் புதிய தலைவர் ஒருவரை இஸ்மாயில் சாப்ரி நியமிக்க வேண்டியிருக்கும்.
அரசாங்க அமைப்புகளில் மீண்டும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளா?
ஜிஎல்சி எனப்படும் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் வணிக நிறுவனங்களில் திறமையானவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
மொகிதின் யாசின் பிரதமரானபோது, பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்க நிறுவனங்களில் நியமிக்கப்பட்டார்கள். இந்த நடைமுறை பலத்த கண்டனங்களைத் தோற்றுவித்தது.
இஸ்மாயில் சாப்ரி இதே நடைமுறையைப் பின்பற்றுவாரா என்றும் பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
தேசிய மின்சார வாரியத்தின் தலைவராக அவர் யாரை நியமிப்பார் என்பதிலிருந்து, அவரின் அரசாங்க நிறுவனங்களுக்கான நியமனப் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.