Home நாடு சரவாக் சட்டமன்றம் நவம்பர் 3-ஆம் தேதியோடு கலைக்கப்பட்டது

சரவாக் சட்டமன்றம் நவம்பர் 3-ஆம் தேதியோடு கலைக்கப்பட்டது

557
0
SHARE
Ad

கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டத்தை மாமன்னர் இரத்து செய்திருப்பதைத் தொடர்ந்து நவம்பர் 3-ஆம் தேதியோடு அம்மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாக சரவாக் முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி அபாங் ஜோஹாரி துன் ஓபெங் அறிவித்தார்.

சட்டமன்றக் கலைப்பை மாநில ஆளுநர் துன் அப்துல் தாயிப் மாஹ்முட் மலேசிய அரசியலமைப்பு சட்டங்களின்படி அறிவித்தார் என்றும் அபாங் ஜோஹாரி தெரிவித்தார்.

“இனி எந்த நேரத்திலும் சரவாக் சட்டமன்றத் தேர்தல் நடைபெறலாம். சரவாக் சட்டமன்றத்திற்கான தவணைக்காலம் ஏற்கனவே நிறைவுக்கு வந்து விட்டது. அவசர காலம் இரத்து செய்யப்பட்டு விட்டதால், சட்டமன்றமும் இயல்பாகவே உடனடியாகக் கலைக்கப்பட்டு விட்டது. எனினும், சட்டமன்றத்தின் அவைத் தலைவர் முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கு சட்டமன்றக் கலைப்பைத் தெரிவிப்பார்” என இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) காலையில் கூச்சிங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அபாங் ஜோஹாரி அறிவித்தார்.

#TamilSchoolmychoice

சரவாக் சட்டமன்றத்தின் பெரும்பாலான இடங்களை ஜிபிஎஸ் எனப்படும் காபுங்கான் பார்ட்டி சரவாக் என்ற கூட்டணி வைத்திருக்கிறது. சரவாக் சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகளினால் கூட்டணி உடையலாம் என்ற ஆரூடங்களும் கூறப்படுகின்றன. பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் ஜிபிஎஸ் கூட்டணியை எதிர்த்து பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.