Home நாடு 4 மொழிகளில் ம.நவீன் சிறுகதை வெளியீடு

4 மொழிகளில் ம.நவீன் சிறுகதை வெளியீடு

983
0
SHARE
Ad

கொரோனா சூழலை தளமாகக் கொண்டு 27 ஆசிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜப்பான் அறக்கட்டளையின் ஆசிய மையம், இந்த மாதம் வெளியிட்டுள்ள ‘ஆசிய இலக்கியத் திட்டத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் ‘ஒளி’ எனும் சிறுகதை, தமிழிலும் ஆங்கிலம், ஜப்பானிய, மலாய் மொழிகளிலும் வெளிவந்துள்ளது.

மலேசியா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 27 ஆசிய எழுத்தாளர்கள் பல மொழிகளில் எழுதிய புதிய கதைகளைக் கொண்டுள்ள ‘YOMU’ எனும் இத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரே தமிழ்க் கதை ‘ஒளி’ என்பது குறிப்பிடத்தக்கது. ‘YOMU’ ஜப்பானிய மொழியில் ‘வாசிக்க’ என்று பொருள்.

பல இனங்கள் வாழும் தற்கால மலேசியாவின் பல்வேறு கலாசார, சமூக பின்னணிகளையும் கொரோனா கொள்ளை நோயின் தாக்கத்தையும் பிரதிபலிக்கின்றன இக்கதைகள். ம.நவீன் எழுதியுள்ள தமிழ்ச் சிறுகதையுடன், நாடியா கான் (மலாய்) எழுதிய ‘Angsana’, டெரன்ஸ் டோ (ஆங்கிலம்) எழுதிய ‘Second Course’ செகண்ட் கோர்ஸ், லீ ஸீ ஷு (சீனம்) எழுதிய நோட்டீஸ் ஆப் குளோஷர் ‘Notice of Closure’ ஆகியவை மலேசிய எழுத்தாளர்களின் ஏனைய கதைகளாக இடம் பெற்றுள்ளன.

#TamilSchoolmychoice

இந்த நான்கு எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகளின் தொடக்கப் பகுதியை மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் ஆகிய மொழிகளில் வாசிக்கும் ஒலிப்பதிவுகளும் இதில் இடம்பெற்றுள்ளது.

உலககெங்கும் விரிவான அனைத்துலக கலாசார பரிமாற்ற நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் ஜப்பானின் ஒரே அமைப்பு ஜப்பான் அறக்கட்டளை ஆகும். இதன் ஒரு பிரிவாக 2014இல் நிறுவப்பட்ட ஆசிய மையம், ஆசியாவெங்கும் மக்களை இணைப்பதையும், கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதையும் கலாசார நிகழ்ச்சிகளை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்ட ஒரு சிறப்புப் பிரிவாகும்.

உலகமும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பெருமளவில் மாறி, எல்லை தாண்டிய பயணங்கள் தடைசெய்யப்பட்ட கொவிட்-19 கொள்ளைநோய் பரவல் காலத்தில், ஆசிய எழுத்தாளர்களின் சிந்தனைகளையும் வாசகர்களுடன் அவர்கள் பகிர விரும்பும் செய்திகளையும் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த ஆசிய இலக்கியத் திட்டம் தொடங்கப்பட்டதாக ஜப்பான் அறநிறுவனத்தின் ஆசியா மையம் குறிப்பிட்டது.

2000ஆம் ஆண்டில் அல்லது அதற்குப் பிறகு இலக்கியப் பணியில் தீவிரமாக ஈடுபடத்தொடங்கிய இந்த ஆசிய எழுத்தாளர்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் எழுத்துப் பணியை விரிவுபடுத்த ஆதரவளிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். ‘உலக கொள்ளைநோய் பரவலிலும் அதற்கு பின்னரும் ஆசியா’ என்பது இந்த எழுத்துத் திட்டத்திற்கான பரந்த கருப்பொருள். படைப்புகளை ஜப்பானிய, ஆங்கில மொழி பெயர்ப்புகளிலும் மூல மொழிகளிலும் வாசிக்கலாம்.

சிறுகதைகளுடன், ஆசியாவின் தற்கால இலக்கியச் சூழலை அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு செய்திகளும்  நேர்காணல்களும் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன.

மலேசியாவைப் பிரதிநிதித்த நான்கு மொழி எழுத்தாளர்களின் படைப்புகளையும் வாசிக்க:

https://jfac.jp/en/culture/projects/p-yomu-malaysia/?utm_source=Facebook&utm_medium=social&fbclid=IwAR1XzLYoOJwffg9mvu5L-6Z-74hhK2AXg8c_0RlQwInJAx7H_omJL70hU0o

கதையின் ஒரு பகுதி ஒலிவடிவத்தைக் காண :

https://www.youtube.com/watch?v=662_Cx4mWQk&feature=emb_imp_woyt