Home நாடு சாகிர் நாயக் விவகாரம் – ஹிண்ட்ராப் இராமசாமிக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறது

சாகிர் நாயக் விவகாரம் – ஹிண்ட்ராப் இராமசாமிக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறது

877
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் சாகிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கில் முன்னாள் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி 1,520,000-00 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த விவகாரம் இந்திய சமுதாயத்தில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்திருக்கிறது.

இராமசாமிக்கு ஆதரவாக இந்திய சமூகத்தின் பலதரப்பட்ட தரப்புகளில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

முன்னாள் அமைச்சர் பொன் வேதமூர்த்தி தலைமையில் இயங்கும் ஹிண்ட்ராப் இயக்கமும் இராமசாமிக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மலேசிய இந்தியர்களும், பேச்சு சுதந்திரத்தையும் மத சுதந்திரத்தையும் போற்றும் சமூகப் போராளிகளும் இந்த நெருக்கடியான நேரத்தில் இராமசாமிக்கு ஆதரவாக ஒன்று திரள வேண்டும் என ஹிண்ட்ராப் கேட்டுக் கொண்டது.

உயர்நீதிமன்றம் தீர்ப்பின்படி இராமசாமி செலுத்த வேண்டிய இந்த தொகை உண்மையிலேயே அதிகமான ஒன்றாகத் தோன்றுகிறது எனக்குறிப்பிட்ட ஹிண்ட்ராப் அறிக்கை இதுபோன்ற இழப்பீடுகள் மலேசிய நீதித் துறை வரலாற்றில் மிகவும் அபூர்வம் எனவும் சுட்டிக் காட்டியது.

இராமசாமிக்கு ஆதரவாக கீழ்க்காணும் தேதியில் நடைபெறவிருக்கும் ஒற்றுமைப் பேரணியில் சமூகத் தலைவர்களும், அரசு சாரா இயக்கங்களும், மனித உரிமை இயக்கங்களும் திரளாகக் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் ஹிண்ட்ராப் கேட்டுக் கொண்டுள்ளது:

தேதி : 7.11.2023 (செவ்வாய்க்கிழமை)
நேரம் : மாலை 7.00 மணி
இடம் : சீன அசெம்பிளி மண்டபம், (Chinese Assembly Hall) கோலாலம்பூர்

இந்தக் கூட்டத்தில் இராமசாமியும் கலந்து கொண்டு தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து விளக்கமளிப்பார்.

தனக்கு எதிராக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின்படியான இழப்பீட்டுத் தொகையை மக்களிடம் திரட்டிவரும் இராமசாமியின் முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் எனவும் ஹிண்ட்ராப் கேட்டுக் கொண்டது.

இழப்பீட்டுத் தொகை தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இழப்பீட்டுத் தொகையை இராமசாமி அடுத்த 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து தமிழர் குரல் இயக்கம் இராமசாமிக்கு ஆதரவாக இழப்பீட்டுத் தொகைக்கான நிதியைத் திரட்டும் முயற்சியைத் தொடங்கியது.

அந்த முயற்சிக்கு பலதரப்பட்ட அமைப்புகள் ஆதரவு தந்து வருகின்றன.

இதற்கிடையில் இன்று சனிக்கிழமை (நவம்பர் 4) மாலை 5.00 மணி வரையில் இராமசாமிக்கு ஆதரவாக 577,475-20 ரிங்கிட் திரட்டப்பட்டிருப்பதாக அவரின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சாகிர் நாயக் தொடர்ந்த அவதூறு வழக்கு

சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் இராமசாமிக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில், இராமசாமி 1,520,000 ரிங்கிட்  இழப்பீடாக வழங்க வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 2) தீர்ப்பளித்தது.

சாகிர் நாயக் இராமசாமி மீது 2 வழக்குகளைத் தொடுத்திருந்தார். முதலாவது வழக்கு அக்டோபர் 2019-ஆம் ஆண்டிலும், இரண்டாவது வழக்கு அதே ஆண்டில் டிசம்பர் மாதத்திலும் இராமசாமி மீது தொடுக்கப்பட்டது.

இரண்டு வழக்குகளிலும் இராமசாமி மேற்குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஹாயாதுல் அக்மால் அப்துல் அசிஸ் தீர்ப்பளித்தார்.