வாணியம்பாடியில் அப்துல் காதர் நூல் வெளியீட்டு விழா
தமிழ்நாட்டின் வாணியம்பாடியில், கவியருவி பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் பவளவிழாவில் ‘பூக்களாலும் பூகம்பம் நிகழலாம்’ எனும் நூலை கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுப் பேருரை ஆற்றினார் சரவணன்.
கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்களிப்பு செய்துள்ள பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் பவளவிழாவில் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டு, அவரது நூலையும் சரவணன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.
உலகத் தமிழ் வம்சாவளி ஏற்பாட்டில் முப்பெரும் விழா
#TamilSchoolmychoice
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழக வளாகத்தில் முப்பெரும் விழாவாக நடைபெற்று வரும் 10ஆவது உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டிலும் கலந்து சரவணன் சிறப்புரையாற்றினார்.
பெருந்தமிழன் இராசராசன் விருது
மலேசியாவில் தமிழுக்கும், சமயத்திற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் தன்னலமின்றி சேவையாற்றி வரும் டத்தோஶ்ரீ சரவணனைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் தமிழகத்தில் பெருந்தமிழன் இராசராசன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மாமல்லபுரம் கிங்ஸ் மெடிக்கல் அகாடெமியில் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்ற மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் 14வது முப்பெரும் விழாவில் இவருக்கு இந்த பெருமைக்குரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மலேசியாவின் அரசியல் தளத்தில் தனக்கென்ற ஓர் ஆளுமையை கொண்டிருக்கும் சரவணன் தாப்பா நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு 5 முறைகள் தொடர் வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார். மேலும் கூட்டரசு பிரதேச துணை அமைச்சராகவும், இளைஞர் விளையாட்டுத்துறை துணை அமைச்சராகவும், மனிதவள அமைச்சராகவும் பொதுமக்களுக்கு அரசியல் பணியாற்றிருக்கிறார் போன்ற காரணங்களுக்காக சரவணனுக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.