Home நாடு மஇகா தேசியத் தலைவர் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் மார்ச் 27 – வாக்களிப்பு ஏப்ரல் 12!

மஇகா தேசியத் தலைவர் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் மார்ச் 27 – வாக்களிப்பு ஏப்ரல் 12!

140
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகாவின் நடப்பு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் 3 ஆண்டுகால தவணைக் காலம் எதிர்வரும் மே 25-ஆம் தேதியோடு முடிவடைவதை முன்னிட்டு, தேசியத் தலைவருக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மஇகா தேசியத் தலைவர் தேர்தல் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று திங்கட்கிழமை (மார்ச் 18) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் விவரங்களை வெளியிட்டார்.

எதிர்வரும் மார்ச் 27-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 12.00 மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். அதற்கான வேட்புமனுப் பாரங்களை மஇகா தலைமையகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

தேசியத் தலைவருக்கு போட்டியிடுபவர்கள் குறைந்த பட்சம் 250 வேட்புமனுப் பாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மனுப் பாரத்திலும் ஒரு கிளைத் தலைவர் முன்மொழிந்து இன்னொரு கிளைத் தலைவர் வழிமொழிய வேண்டும். ஆக தேசியத் தலைவருக்குப் போட்டியிடுபவர்கள் 500 மஇகா கிளைத் தலைவர்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும்.

போட்டியிருப்பின் ஏப்ரல் 12-ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும்.

தேர்தல் விவரங்களை வெளியிட்ட சரவணன், மஇகாவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் நடப்பு தலைவர் விக்னேஸ்வரனை ஆதரிப்பதாகவும் மஇகாவுக்கான சொத்துகளை ஒருமுகப்படுத்தி, நிலையான சொத்துகளாக நிலைநிறுத்தியிருப்பது அதற்கான முக்கியக் காரணம் எனக் கூறினார்.

அடுத்த இலக்கை நோக்கி கட்சியை வழிநடத்தும் ஆற்றலையும் விக்னேஸ்வரன் கொண்டுள்ளார் எனத் தெரிவித்த சரவணன் இந்தக் காரணங்களால் தாங்கள் யாரும் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லை எனவும் தெரிவித்தார்.

2018-இல் முதன் முறையாக மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஸ்வரன் 3-வது முறையாக கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

மஇகா சட்டவிதிகளின்படி தேசியத் தலைவர் 3 தவணைகள் மட்டுமே பதவி வகிக்க முடியும். அதன்படி விக்னேஸ்வரன் ஏப்ரல் 12-இல் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் 3-வது தவணையாக தலைவர் பதவியை வகிப்பார்.