Home இந்தியா பாஜக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்வு!

பாஜக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்வு!

374
0
SHARE
Ad

புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இந்தியத் தலைநகர் புதுடில்லி நாட்டின் தலைநகர் என்ற பெருமையோடு பரபரப்பான சந்திப்புகளுக்கும், ஆரூடங்களுக்குமான தலைநகரமாக மாறியுள்ளது.

பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், தனிப் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க ஆதரவு தர, கூட்டணிக் கட்சிகள் சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

நேற்று புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் பாஜக கூட்டணித் தலைவர்கள் பிரதமர் மோடியின் இல்லத்தில் குழுமி ஆட்சி அமைப்பது குறித்து விவாதித்தனர்.

#TamilSchoolmychoice

தெலுகு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நிதியமைச்சர், மக்களவைத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளைக் கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமுள்ள தொகுதிகளில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக தனித்து நின்று 240 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் தனித்து ஆட்சியை அமைக்கும் பெரும்பான்மையை பாஜக பெற முடியவில்லை.

காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. தனித்த கட்சியாக காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியாக பாஜகவும், அதற்கு அடுத்த இரண்டாவது நிலையில் காங்கிரசும் திகழ்கின்றன.

மற்ற கட்சிகள் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தாலும் (234+17) 251 தொகுதிகளின் பலம் மட்டுமே காங்கிரசுக்கு கிடைக்கும். ஆட்சி அமைக்க முடியாது.

எனவே, அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்ற பரபரப்பு புதுடில்லியின் பரவத் தொடங்கியுள்ளது. நேற்று புதன்கிழமை (ஜூன் 5) காலை 11.30 மணியளவில் பாஜக மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கிடையில் இந்தியா கூட்டணி தலைவர்களின் சந்திப்பும் நேற்று புதன்கிழமை (ஜூன் 5) நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைக்க ந்தியா கூட்டணி முயற்சி செய்கிறது என்ற அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் பாஜக கூட்டணி தலைவர்களின் சந்திப்புக் கூட்டத்தில் என்டிஏ என்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்வரும் ஜூன் 7-ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சி அமைக்க உரிமை கோரி அதிபரைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 4 நாட்களுக்கு இந்திய அதிபரின் மாளிகையான ராஷ்டிரபதி பவன் மூடப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பதவி ஏற்கும் சடங்குகளின் ஏற்பாடுகளுக்காக அதிபர் மாளிகை மூடப்படுவதாகக் கருதப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட செவ்வாய்க்கிழமை இரவு (ஜூன் 4) புதுடில்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான கூட்டத்திற்கு வருகை தந்து மோடி உரையாற்றினார்.

3-வது முறையாக மோடியே பிரதமராகும் அதிகாரத்தை மக்கள் என்டிஏ என்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வழங்கியிருக்கிறார்கள் என பாஜக தலைவர்கள் முழங்கியிருக்கின்றனர்.

மோடி எதிர்வரும் ஜூன் 8-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.