சென்னை, ஜூன் 29- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதும் ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் பெயர், தொழில், இருப்பிடம் போன்ற எல்லா விவரங்களையும், அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் கூறப்படுகின்றன.
ஆனால் தற்போது பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் ஆண் என்பதற்கு 1 என்றும், பெண் என்பதற்கு 2 என்றும் குறிப்பிட்டுவிட்டு ஆண் பெண் அல்லாத பாலின பிரிவுக்கு 9 என்ற குறியீட்டு எண் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதைப்பற்றி அவர்கள் கூறும்போது, ஏற்கனவே எங்களை அந்த 9 என்ற எண்ணைக் குறிப்பிட்டுத்தான் கிண்டல் செய்கிறார்கள், இப்போது அரசே அந்த எண்ணைக் குறிப்பிட்டிருப்பது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.
பொருளாதார கணக்கெடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்ட போது, இந்தப் படிவம் பற்றி மத்திய அரசில் தான் கேட்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தவறை யார் செய்திருந்தாலும், மத்திய அரசு செய்திருந்தாலும், மாநில அரசு அதைப்பற்றி கேட்காமல் இருந்தாலும், உடனடியாக இதற்கு உரியவர்கள் இதனைக் கவனித்து இந்தத் தவறினைக் களைய ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.