Home உலகம் எகிப்த் அதிபர் தேர்தல்: முதல் சுற்று சுமூகமான முறையில் நடைபெற்றது!

எகிப்த் அதிபர் தேர்தல்: முதல் சுற்று சுமூகமான முறையில் நடைபெற்றது!

552
0
SHARE
Ad

general-abdel-fattah-al-sisiகெய்ரோ, மே 27 – முப்பதாண்டுகளாக எகிப்தில் சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த ஹோஸ்னி முபாரக், கடந்த 2011-ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஜனநாயக முறையில் ஆட்சியைக் கைப்பற்றியவர் முகம்மது மோர்சி. இந்த முயற்சியில் இவருக்குப் பக்கபலமாக இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் நின்றது.

இருப்பினும் அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற தவறியதால், அவருக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதனால், ராணுவம் அவரது பதவியை பறித்தது. அவருக்குத் துணையாக நின்ற இஸ்லாமிய சகோதரத்துவ தலைவர்களும் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடந்த ஜூலை முதல் தொடர்ந்த கலவரங்களுக்கு இடையில் அங்கு நேற்று புதிய அதிபருக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. முன்னாள் ராணுவத் தளபதியாக இருந்து முகமது மோர்சியைப் பதவியிலிருந்து இறக்கிய எகிப்து ராணுவத் தலைவர் அப்துல் பட்டா அல் சிசி அதிபர் பதவிக்கான வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

இவர் மீதுள்ள எதிர்ப்பால் அங்குள்ள புரட்சி இளைஞர் குழுக்களும், இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தினரும் இந்தத் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

இருப்பினும் 59 வயதான சிசி தன்னுடைய அரசின் ஸ்திரத்தன்மை குறித்த தெளிவான பிரச்சாரத்தின் மூலம், தனது ஒரே போட்டியாளரான ஹமீது சப்பஹியை எளிதில் வெற்றி கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தேர்தல் பற்றி அல் சிசி கூறுகையில், “ஹோஸ்னி முபாரக்கின் பதவி இழப்பிற்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்த இஸ்லாமிய இயக்கத்தை முழுவதுமாக நீக்குவேன்” என்று அவர் உறுதியளித்துள்ளார். சிசியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தாலும், அவர் சர்வாதிகாரியாகச் செயல்படக்கூடும் என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.