Home இந்தியா ஆகஸ்டு 7ஆம் தேதி ஆஜராக வேண்டும் – சோனியா, ராகுலுக்கு டில்லி நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்டு 7ஆம் தேதி ஆஜராக வேண்டும் – சோனியா, ராகுலுக்கு டில்லி நீதிமன்றம் உத்தரவு

500
0
SHARE
Ad

subramaniam-swamyபுதுடில்லி, ஜூன் 27 – பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தொடுத்த வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் வரும் ஆகஸ்டு 7ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் கடந்த 1938ஆம் ஆண்டு ‘நேஷனல் ஹெரால்டு’ என்ற செய்தித்தாள் நிறுவனம் ஒன்றை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நிறுவினார். இந்த நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு மூடப்பட்டது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அபகரித்ததாக, சுப்பிரமணிய சாமி, டில்லி பாட்டியாலா பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

#TamilSchoolmychoice

அவர் தனது புகார் மனுவில், நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு ரூ.90 கோடிக்கு கடன் இருந்ததாகவும், அந்த கடனை காங்கிரஸ் கட்சியின் நிதியில் இருந்து கட்சி விதிகளை மீறி சோனியா, ராகுல் ஆகியோர் அடைத்ததாகவும் கூறியிருந்தார்.

அதற்கு பிரதிபலனாகத்தான் காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து அவர்கள் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை அபகரித்தனர் என்று சுப்ரமணிய சாமி கூறினார்.

மேலும், ஹெரால்டு நிறுவனத்தின் ஒரு பகுதி பாஸ்போர்ட்டு நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதன் மூலம் குத்தகை நிபந்தனைகளை காந்தி குடும்பத்தினர் மீறியதுடன், மொத்த சொத்துக்களையும் அபகரிக்க திட்டமிட்டிருப்பது தெளிவாகிறது என்றும் கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து சோனியா, ராகுல் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா ஆகியோர் மீது, சொத்துக்களை அபகரித்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோமதி மனோச்சா, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது குற்றச்சாட்டுக்கான அடிப்படை ஆதாரம் இருப்பதாக தெரிவித்தார். எனவே சோனியா, ராகுல் உள்ளிட்ட 4 பேரும் ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.