Home நாடு “சுல்தான் உத்தரவை மதித்துச் செயல்பட வேண்டும்” – பிகேஆர், ஐசெகவுக்கு பாஸ் வேண்டுகோள்

“சுல்தான் உத்தரவை மதித்துச் செயல்பட வேண்டும்” – பிகேஆர், ஐசெகவுக்கு பாஸ் வேண்டுகோள்

597
0
SHARE
Ad

PAS-Logoகிள்ளான், செப். 8 – சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டும் என்ற சிலாங்கூர் சுல்தானின் உத்தரவை மதித்துச்
செயல்பட வேண்டும் என பிகேஆர் மற்றும் ஐசெகவை, பாஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

மந்திரி பெசார் பதவிக்கு டாக்டர் வான் அசிசா பெயரை மட்டுமே பிகேஆர் மற்றும் ஐசெக பரிந்துரைத்திருப்பது தொடர்பில் அவ்விரு கட்சிகளுக்கும் சுல்தான் தமது கண்டனத்தை தெரிவித்திருப்பது தங்களுக்கு வருத்தத்தையும் கவலையையும் அளித்திருப்பதாக சிலாங்கூர் மாநில பாஸ் செயலாளர் முகமட் கைருடின் ஓத்மான் தெரிவித்தார்.

“சுல்தானின் கட்டளையை ஏற்றுச் செயல்படுமாறு எங்களது கூட்டணிக் கட்சிகளை
கேட்டுக் கொள்கிறேன். அரச அமைப்புக்கு எதிராகச் செயல்படுவதன் மூலம் எதையும் சாதிக்க இயலாது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என உறுதியாக நம்புகிறோம். அதே சமயம் விரைவாக தீர்வு காணப்பட வேண்டும். ஏனெனில் இது விஷயத்தில் எந்தளவு
தாமதம் ஏற்படுகிறதோ, அந்தளவு மக்கள் அவதிப்படுவார்கள்,” என்று திங்கட்கிழமை   நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கைருடின் ஓத்மான் கூறினார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மக்களின் நலனைக் கருதி, மாநில பாஸ் பிரிவானது, எப்போதுமே சுல்தான்  கட்டளையை ஏற்றுச் செயல்படும் என்றார் அவர்.

“போதும்… இனிமேல் மக்கள் நலன் குறித்து சிந்திப்போம்,” என்று கைருடின் ஓத்மான் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக மந்திரி பெசார் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே பரிந்துரை செய்துள்ள
பாஸ் மற்றும் பிகேஆர் தலைமைக்கு, தனது தனிச்செயலர் டத்தோ முகமட் முனிர்
பனி மூலம், தனது கடும் அதிருப்தியை சுல்தான் தெரியப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.