Home நாடு முதலில் விவாகரத்து, பிறகே மதமாற்றம்: நெகிரி மாநிலத்தில் சட்டத் திருத்தம்!

முதலில் விவாகரத்து, பிறகே மதமாற்றம்: நெகிரி மாநிலத்தில் சட்டத் திருத்தம்!

531
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 6 – நெகிரி செம்பிலானில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய சட்டத்தின்படி, இனி இஸ்லாத்தை தழுவ விரும்பும் திருமணமான ஆணோ அல்லது பெண்ணோ தனது வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது.

இதன் பின்னர்தான், தாம் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியதாக அந்நபர் சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகிறது.

HASSANimageஇஸ்லாத்தின் புனிதத்தை பாதுகாக்கும் வகையிலேயே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் (படம்) தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இதன் மூலம் மதமாற்றத்துக்கு முன் விவாகரத்து செய்யாத தனி நபர்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய முடியும். விவாகரத்து செய்யாமல் மதம் மாறுவதால் பல்வேறு சர்ச்சைகள் எழுகின்றன. இது தடுக்கப்பட வேண்டும்.  தனி நபர்கள் சிலரது செயல்பாடு காரணமாக இஸ்லாம் மதத்தை குறை கூறுவதையோ அல்லது அதிகாரிகளை விமர்சிப்பதையோ அனுமதிக்க முடியாது,” என்றார் முகமட் ஹாசன்.

சில சர்ச்சைகள் காரணமாக இஸ்லாம் மீதான மதிப்புக்கு சற்றே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய பின்னர் ஓர் ஆணோ, பெண்ணோ முஸ்லிம் அல்லாத ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு இணைந்து வாழ முடியாது. எனவே மதம் மாற விரும்பினால் அதை சரியாகவும், சட்டப்படியும் செய்ய வேண்டும். இஸ்லாத்தை தழுவிய ஒருவர் மரணம் அடைந்த பின்னர் இஸ்லாமியர்கள் அல்லாத குடும்பங்கள் சில அவரது உடலை ஒப்படைக்கும்படி இஸ்லாமிய இலாகா அதிகாரிகளுடன் தேவையற்ற மோதல்களில் ஈடுபடுவதை அறிகிறோம். இத்தகைய மோதல்களை தடுக்க வேண்டுமானால், அனைத்தும் சட்டப்படி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்றார் முகமட் ஹாசான்.