Home நாடு அன்வாரை விடுதலை செய்ய வேண்டும் – வெள்ளை மாளிகைக்கு அமெரிக்கர்கள் மனு!

அன்வாரை விடுதலை செய்ய வேண்டும் – வெள்ளை மாளிகைக்கு அமெரிக்கர்கள் மனு!

463
0
SHARE
Ad

Anwar Ibrahimகோலாலம்பூர், பிப்ரவரி 11 – அமெரிக்காவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான கொள்கைகளின் அடிப்படையில், அன்வாரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வெள்ளை மாளிகை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அமெரிக்கர்கள் சிலரால் கோரிக்கை மனு ஒன்றை இணையம் மூலமாக திறக்கப்பட்டுள்ளது.

ஜெ.எம்.அலெக்சாண்ட்ரா, விர்ஜினியா என்ற நபரால் http://petitions.whitehouse.gov. என்ற இணையத்தளத்தில் இந்த மனு துவங்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் உடனடியாக 150 கையெழுத்துக்கள் இருந்தால் மட்டுமே அது செயல்படத் துவங்கும் என்றும், வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் 100,000 கையெழுத்துக்கள் தேவை என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அந்த மனுவில், “அன்வார் இப்ராகிம், மலேசிய எதிர்கட்சித் தலைவர், ஜனநாயகத்தின் தலைவர், இஸ்லாமிய நீதியின் மீது நம்பிக்கையுள்ளவர், அமெரிக்காவின் நீண்ட கால நண்பர் அவர் பிப்ரவரி 10, 2015-ல் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

இது தவிர, அந்த மனுவில் மலேசிய நீதித்துறை அமைப்பு பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் கவலை தெரிவிக்கும் வகையில் சில கருத்துகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், அந்த மனுவில், அன்வாருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டவுடன் வெள்ளை மாளிகை அனுப்பிய அறிக்கை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அன்வாருக்கு தண்டனை வழங்கப்பட்டவுடன் வெள்ளை மாளிக்கை உடனடியாக வருத்தம் தெரிவிக்கும் அறிக்கையை அனுப்பியது. அன்வார் மீது தொடரப்பட்ட வழக்கும், நடத்தப்பட்ட விசாரணைகளும், மலேசிய சட்டங்கள் குறித்தும், நீதித்துறையின் நேர்மை குறித்தும் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வெள்ளை மாளிகை வெறும் அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது. செயலிலும் காட்ட வேண்டும். அன்வார் ஒரு அரசியல் கைதி. மலேசியாவில் எதிர்கால ஜனநாயகம் கேள்விக் குறியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் மலேசியா இடையிலான கொள்கைகளில் அன்வாரை விடுதலை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.” என்று அந்த மனுவிலுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதிக்குள் 100,000 கையெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டால், இந்த மனுவை வெள்ளை மாளிகை பரிசீலனை செய்வதோடு, அதிகாரப்பூர்வமாகவும் அதற்கு பதிலளிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இன்று மதியம் 3.00 மணிவரை 14,694 கையெழுத்துக்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.