Home நாடு நஜிப்-பழனி-சுப்ரா- சந்திப்பில் நடந்தது என்ன? பரபரப்பு ஆரூடங்கள்!

நஜிப்-பழனி-சுப்ரா- சந்திப்பில் நடந்தது என்ன? பரபரப்பு ஆரூடங்கள்!

538
0
SHARE
Ad

Palanivel-and-MIC-300x202கோலாலம்பூர், பிப்ரவரி 20 – மஇகாவில் நாளுக்கு நாள் புதிய அறிக்கைப் போர்கள், ஒரு நாளை இரண்டு மூன்று பத்திரிக்கையாளர் சந்திப்புகள் – மணிக்கு ஒரு தடவை மாறும் சம்பவங்கள் என தொலைக்காட்சித் தொடர்போல பரபரப்பாக அரசியல் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

திங்கட்கிழமை பிரதமருடன் நடைபெற வேண்டிய சந்திப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்த பழனிவேல், நேற்று முன்தினம் புதன்கிழமை பிரதமர் மற்றும் தேசிய முன்னணியின் முக்கியத்தலைவர்களுடன் கலந்து கொண்டு சங்கப் பதிவகம் விதித்த உத்தரவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளார் என்ற அறிவிப்பும் மஇகா வட்டாரங்களில் ஆச்சரிய அலைகளை  ஏற்படுத்தியது.

தற்போது இந்த சந்திப்புகள் குறித்தும் பின்னணியில் நடந்தது என்ன என்பது குறித்தும் பல்வேறு ஆரூடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்றைய வியாழக்கிழமை ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழிலும் இது குறித்த கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

திங்கட்கிழமை காலையில் பிரதமர் அழைத்திருந்தும் தனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்ற காரணத்தால் பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என பழனிவேல் அறிவித்திருந்தார்.

எனினும் இதுகுறித்து, பலத்த கண்டனங்கள் கட்சி வட்டாரங்களில் எழுந்தன. முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலுவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

நேற்று புதன்கிழமை வழக்கமான அமைச்சரவைக் கூட்டம் என்பதால் பழனிவேல் எப்படியும் அதனை தவிர்த்து விட முடியாது என்ற கண்ணோட்டத்தில் நேற்று பிரதமரை நேருக்கு நேர் சந்திக்கவேண்டிய கட்டாய சூழ்நிலையில் கட்சி விவகாரம் குறித்த இறுதி முடிவை பழனிவேலு எடுக்க வேண்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

மூன்று அமைச்சரவைக் கூட்டங்களில் பழனிவேல் தொடர்ச்சியாக கலந்து கொள்ளவில்லையா?

ஆனால், புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் பழனிவேல் தவிர்க்க எண்ணியிருந்தார் என்ற சூழ்நிலை நிலவியிருக்கின்றது.

GP STORY NST

இந்த நிலைமையில்தான், அமைச்சரவையில் செயலாளராகச் செயல்படும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சா, தொலைபேசியில் பழனிவேலுவை அழைத்து,  “நீங்கள் இதுவரை இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. இந்த வார அமைச்சரவையிலும் கலந்து கொள்ளவில்லை என்றால் 3 அமைச்சரவைக் கூட்டங்களில் தொடர்ச்சியாக நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்ற காரணத்தால், உங்களை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்” என எச்சரித்திருக்கின்றார் என நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள பழனிவேல் வந்திருக்கின்றார். அப்போது அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக அவரைச் சந்தித்த பிரதமர், துணைப் பிரதமர், தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் ஆகியோருடனான சந்திப்பில் ஏற்கனவே தான் ஒப்புக்கொண்டபடி சங்கப் பதிவகம் விதித்த உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு அந்த உத்தரவின் சாராம்சங்கள் அடங்கிய கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கின்றார்.

குழப்பம் வந்து விடக் கூடாது என்பதற்காக, இந்த முறை பழனிவேல் சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்கின்றேன் என ஒப்புக் கொண்டு கையெழுத்திட வேண்டியதாகிவிட்டது.

அதன்பின்னரும், அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய பழனிவேல், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், பிரதமர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு சென்று விட்டார் என்றும் பின்னர் பிரதமர் அவருடன் மீண்டும் தொடர்பு கொண்டு அவரை அமைச்சரவைக்கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தினார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவித்தது.

நேற்று நடைபெற்ற மசீச சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு கொண்டாட்டத்திலும் பழனிவேல் தனது துணைவியார் டத்தின்ஸ்ரீ கனகத்துடன் கலந்து கொண்டார்.

Najib CNY MCA open house 2015

நேற்றைய மசீச சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் டத்தோஸ்ரீ பழனிவேலுவும் அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ கனகமும்